Thursday, July 30, 2020

மானசா தேவி முதல்...



அன்புள்ள ஜெ,

வெண்முரசு தொடரைப் பன்னிரு படைக்கலத்தில் இருந்து வாசிக்க ஆரம்பித்துக் கடந்த நான்காண்டுகளாகத் தொடர்ந்து வந்தேன். இவை எனக்கு  என்றும் நினைவில் நிற்கும் ஒளிமிக்க ஆண்டுகள். தங்களுக்கு என் வணக்கமும் நன்றியும். நிறைவின் வெறுமை தாக்கினாலும், எனக்கு இன்னும் வாசிப்பதற்கு முதற்கனல் முதல் வெய்யோன் வரை ஒன்பது நாவல்கள் உள்ளன என்பது ஆறுதலாக உள்ளது.

வெண்முரசின் நிறைவில் சீர்ஷன் மானசாதேவி ஆலயத்தில் நாக வழிபாட்டைக் காண்கிறார். மேலும் சென்று மானசாதேவியின் வழி வந்த பார்ஸ்வநாதரைத் தரிசிக்கிறார். இறுதியில்  நாகபடத்தின் மேல் நடனமிட்ட கண்ணனின் குழவிச்சிற்றடிகளைத் தலைசூடிச் சரணடைந்து திளைக்கிறார்.
இங்கிருந்து திரும்பி முதற்கனலுக்குச் சென்றால், மானசாதேவி ஆஸ்திகனுக்குச் சொல்லும் நாகர்களின் கதையோடு வெண்முரசு தொடங்கி அந்தாதி போல ஒரு முடிவிலா வாசிப்புச்சாத்தியத்தை அளிக்கிறது.

வேரென இம்மாநிலத்தை உண்டு விதையெனப் பெருக்கிய மரம், வேரை அணைத்து நிலை நிறுத்தும் மண், வாழ்வின் கொடையெனப் பூத்த மலர்கள், கிளைதொறும் நெருக்கிக் கனியுண்ணும் கிளிகள் என இப்பெருங்காவியம் படைத்த உங்களையும், உறுதுணையான குடும்பத்தையும், உடன் வரும் வாசக நண்பர்களையும்  வணங்குகிறேன். 

அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை