Sunday, July 12, 2020

விதுரரின் சாவு


அன்புள்ள ஜெ

வெண்முரசில் பலவகையான சாவுகள் வந்திருக்கின்றன. கொடூரமான சாவுகள். அதிலும் கடைசிநாவலான கல்பொருசிறுநுரையில் நீரில் மூழ்கி இறப்பது, தீயில் புகுந்து மறைவது என தொடர்ச்சியாக சாவுகள் வருகின்றன. ஆனால் விதுரரின் சாவுபோல விசித்திரமான சாவு வேறு இல்லை.பரிவிரஜர் என்ற முறையில் அவர் உயிர்விடுகிறார். அவருடைய மொத்த வாழ்க்கையையே தொகுத்துப்பார்க்க முடிகிறது. அவர் யார்? அரசகுடியினர் அல்ல, ஆனால் அரசகுடியினராக வாழ்ந்தார். குந்தியை அடையவில்லை ஆனால் அடைந்தார். இப்படியே எல்லாமே இரண்டுக்கும் நடுவே என்னவென்று சொல்லமுடியாமலேயே ஆகிவிட்டது. சாவும் அப்படித்தான். குடும்பஸ்தரும் இல்லை. துறவியும் இல்லை. அந்த இரண்டுமில்லாத நிலையில் உயிர்விடுகிறார். அந்த சாவு மனதை கலக்கவில்லை. வெண்முரசு அதை கடந்துவிட்டது. ஒருவகையான பெருமூச்சுதான் வந்தது

செல்வக்குமார்