Monday, July 18, 2016

அதிர்ந்த தருணம்!




அன்பு ஜெ...

பன்னிரு படைக்களம் – வேகம் மிக்க பகுதியாக இருந்தது. ஜரைமைந்தன், சிசுபாலன் போன்ற உபகதைகள் பிரத்யேகமான, கருத இயலாத கதைப் பின்னலால் இயல்பான உந்துதல் மிக்கதாக அமைந்து விட்டது. மகாபாரதத்தின் மாந்தர் அனைவரின் பக்கமும் ஏதோ ஒரு வகையில் நியாயம் இருக்கிறது என்று சொல்ல வரும் தங்கள் கருத்து உண்மைதான் என்றாலும்  (அல்லது அவர்கள் நியாயம் அவர்களுக்கு என்று இருந்தாலும்) எனக்கு ஏற்புடையதாக இல்லை. பழகி விட்ட காவியம் என்பதனால் இப்படித் தோன்றுகிறது. பிறருக்கும் இப்படித்தானா எனத் தெரியவில்லை. தாங்கள் இதனைப் பொருட்படுத்தப் போவதில்லை என்று தெரிந்தாலும் சொல்லி வைக்கிறேன்..! 

துரியோதனனின் பொறாமை உள்ளம் பற்றி எரிந்து கொண்டு இருப்பதை இருள்விழியோனிடம் அவனே சொல்வது மூலமாக (ஒருவழியாக) சுட்டிக் காட்டப் படுகிறது. வாரணாவதத்திற்குப் பிறகு இரண்டாம் முறையாக அவனது பேராண்மைத் தோற்றம் சிதைக்கப் பட்டது இங்கேதான்..! தாங்களே பலமுறை கூறி இருப்பது போல இருமை இயல்பானதுதானே. துரியோதனனின் பொறாமைத்தீ எரியும் உள்ளத்தின் ஆறாத வன்மம் வியாச பாரதத்தில் இன்னும் கொஞ்சம் அதீதமாகவே காட்டப் படுகிறது. தங்களின் ‘எல்லோரும் நல்லவரே எனும் நல்லெண்ணம்(!) இந்த மாபெரும் காவியப் படைப்பான வெண்முரசு-விற்கு நியாயம் செய்யுமா என்பது எனது சொந்தக் கவலையாகி விட்டது..

நிற்க,, நான் எண்ணி(!) இருந்தது போலவே திரௌபதி வஸ்த்ராபரணத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் அபயக் கரம் சேலை வளர்க்க வரவில்லை. ஆடைகள் பொழிந்து காத்த அந்தப் பெண்களின் கருணை மனத்தில் ஏற்கனவே இருந்த அவன், அந்தக் கணத்தில் முற்றிலுமாகவே வியாபித்து இருந்திருக்கக் கூடும் (என எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்). வெண்முரசு தனக்கென பாதை அமைத்துச் செல்கிறது. பாரதத்தின் இதுபோன்ற இயற்கை மீறின மற்ற நிகழ்வுகள் எல்லாவற்றையுமே கூட தங்கள் எழுத்துத் திறமையால் லாவகமாகக் கடந்து செல்ல முடியும்தான்...என்பதை பெருமூச்சுடன் ஒத்துக் கொள்கிறேன். அனைத்துக்கும் மேல் இந்த ‘பன்னிரு படைக்களம்  வெண்முரசு மாலையில் ஒரு மாணிக்கம் போல ஒளிர்கிறது.

ஒரு பெண்ணின் மானத்தைச் சிதைக்க நினைக்கும் ஆணின் தைரியமே இல்லாத திகைக்க வைக்கும் குழு மனப்பான்மை, தான் மட்டுமே உணரக்கூடிய அந்த வலியை நீக்கக் கரம் நீட்டித் தன்னைத்தானே காக்க முன்வரும் பெண்மையின் வன்மை, ‘நானும் உனக்குத் தாய் தானடா என்பவளை மறுத்து, அடக்க நினைக்கும் ஆணின் நிமிர்ந்த திமிர் என அனைத்தும் எனைத் திரும்பவும் படிக்க வைத்தது. அதற்குள் முடிந்து விட்டதே என வருத்திய பன்னிருபடைக்களம். ஐந்தில் ஓங்கியவளை வாழ்த்தி முடித்த போது என்னுள் ஏதோ ஓர் அமைதி, ஆண்மகன் எனக் கூச வைத்து இருந்ததை உணர்ந்தேன். அன்னையின் ஆடைவிலக்கம் எப்படியெல்லாம் விவரிக்கப்படும் என்று எதிர்பார்த்ததொரு உள்ளார்ந்த உணர்வு ஒன்று என்னுள் எழுந்து அடங்கியதோ என நினைத்து அதிர்ந்து போய் இடப்பக்கம் திரும்பிப் பார்த்தே விட்டேன். அங்கே மகிடன் இல்லை.  

வணங்குகிறேன்!    

அன்புடன்,
ராஜேஷ்கண்ணன்.இராம.