Sunday, July 17, 2016

அவைநிகழ்வில் நகைச்சுவை




வெண்முரசு –வெய்யோன் 25 இல் அவைநிகழ்வில் நகைச்சுவை வெடித்துத் தெரிக்கிறது. கூடவே கீழ்வரும் வரிகளில் கண்ணீரும் வந்தது
“அவனருகே நின்றிருந்த சேடி துணிகிழிபடும் ஒலியில் சிரித்தாள். கர்ணன் அவளை நோக்க அவள் சாமரத்துடன் விலகிச் சென்று அவைமேடை மூலையில் நின்று உடல்குறுக்கி சிரிப்பை அடக்கினாள்.

சேடியரும் மன்னனுடன் தடையின்றி குதூகலத்தில் பங்கு கொள்கிறாள். கர்ணன் பெருங்கருணையாளனாகக் காட்டப் படுகிறான். ஆசிரியரின் மனிதம் பொங்கிப் பெருகும் இடம். வெண்முரசே சாமானியனை சரித்திர நாயகர்களுடன் இணைவைப்பது தானே.

இந்த  அரசுமுறைகள் மறைமுகமாக கார்பொரேட் அலுவலகங்களீல் உள்ளன. அவற்றில் அமைதியாக கடுமையாக அடுக்கப்பட்ட படிநிலைகளில் இது போன்ற நிகழ்வுகளும் பொற்தாள ஒலிகளும் (ஜால்ரா எனும் இசையும் கருவி) குழாய்க் காற்சட்டையும் கருங்குப்பாயமும் கழுத்துப் பட்டையும் அணிந்த நவீன குடித் தலைவர்களால் அரங்கேற்றப்படுகின்றன.
பெருங்கருணையுடன் முறைதவறாமல் நிகழக்கூடிய நிர்வாக அல்லது மேலாண்மை முறையில், protocol களும் procedure களும் இல்லாமல் முடிவெடுத்தலும் தகவல் தொடர்பும் (Decision making and Communication) நிகழ  வேண்டும் என்ற ஆசிரியரின் ஏக்கம் கர்ணன் மூலம் வெளிப்படுகிறதா? அதனால் தான் காந்தி இன்று மிகவும் தேவைப்படுகிறாரா?

கார்பரேட் நிறுவனங்களின் முறைமைகளை அங்கதம் செய்யும் படைப்புகள் ஆங்கிலத்தில் நிறைய வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த genre  இல், புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு குழுமர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
ஆர் ராகவேந்திரன்
கோவை