Sunday, July 17, 2016

அலையும்வேர்களும் நெளியும் நாகங்களும்



   


ஜெ, வெண்முரசு விவாதங்களில் பொதுவாக அதிகமாகக் கவனிக்கப்படாமல் போன ஒரு முக்கியமான இடம் காண்டீபம் நாவலில் வரும் மணிபுரி பகுதி. ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறி காமத்தின் நுட்பமான இடங்களை அறியும் அந்த பகுதி தமிழில் எழுதப்பட்ட மிகமுக்கியமான இடங்களில் ஒன்று. அது உங்கள் சுதந்திரமான கற்பனை. அத்துடன் அதில் இணைந்துள்ள உவமைகளும் உருவகங்களும் பெரிய கனவை விதைப்பவை. 

குறிப்பாக அர்ஜுனன் மூழ்கிச்சென்று நீருக்குள் அலைபாயும் வேர்களைப் பார்க்கும் இடம் . அந்த இடம் அப்படியே உலூபியைக் காண அவன் பாதாளம் போய் அங்குள்ள நாகங்களின் தொங்கும் உலகைக் காண்பதுடன் ஒத்துப்போகிறது. அதையெல்லாம் கதையாக அல்ல கவிதையை வாசிப்பதுபோல அர்த்தம் அளித்து வாசிக்கவேண்டியிருக்கிறது. 

அந்த அலையும்வேர்களும் நெளியும் நாகங்களும்தான் ஆழ்மனதின் காம உணர்வுகளுக்குரிய மிகச்சிறந்த உவமைகள் என எனக்குப்படுகிறது. இத்தனைநாளும் அதுதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதைத்தான் சென்று பார்த்தேன் மீண்டும் வாசிக்கையிலும் அதே மனக்கிளர்ச்சி இருந்தது.

 சரவணன்.
மும்பை