Wednesday, January 24, 2018

புதுமலர்

அன்புள்ள ஜெ ,


முதல்விசயம் துச்சளையை கூட்டி வந்ததற்காக  நன்றி :)  பிந்துமதி ,கரேணுபதி பார்த்து நொந்திருந்தேன்  , துச்சளை சிரிக்கும் புதுமலர்  போல இருக்கிறாள்  .
சிரித்தமுகம் என்பது மலையின்  மீது பொன்னொளி  விழுவது  போல என தோன்றும் , சிரிப்பு  அப்படியே ஆளை இன்னொருவராக  நெருக்கமானவராக  மாற்றிவிடும் ,   துச்சளை  அப்படிதான் , அவளது அதிக எடை கொண்ட உடல் அந்த சிரித்த முகத்தினால்  அழகான ஒன்றாக மாறி விடுகிறது , குண்டு குழந்தையை ரசிக்கிறோமே , அது போல  . இப்போது யோசிக்கும்போது உணர்கிறேன் , நான்  நெருக்கமானவராக நினைக்கும் எல்லோரும் மலர்ந்த  முகம் கொண்டவர்களாகவே  இருக்கிறார்கள் , பிடிக்காதவர்கள் என யோசிக்கும் போதே அவர்களின் சுழித்த முகம்தான்  மனக்கண்ணில்  முதலில் வருகிறது :)
துச்சளை உண்மையான பிரபு மனநிலை கொண்டவள் , பிரபு மனநிலை என நான் நினைப்பது "கொடை உள்ளமும்  , வறியவர்களை  அல்லது தன் கீழுள்ளவர்கள்  மீதான அன்பும்" . துச்சளை நூற்றுவர்  தலைவனிடம்  பேசியதை கண்ட போது இதை உணர்ந்தேன் . ராணி  மங்கம்மா  ஞாபகத்திற்கு வந்தாள் .
......
பிந்துமதியின் காலில் சிக்கிய  நூல்சிக்கலும் , அதை அவள் வெண்புழுவாக  உணர்ந்த  இடமும் மிக முக்கியமான இடம் , அதை இன்னும் தெளிவாக உணர்ந்த பின் உங்களிடம் அதை பகிர்வேன்  .