Friday, June 22, 2018

மைந்தனும் அன்னையும்

அன்புள்ள ஜெ

பூரிசிரவஸுக்கும் பிரேமைக்குமான அந்தச் சந்திப்பும் அவள் அவனை கைகளுக்குள் எடுத்துக்கொள்வதும் அவனுடன் கனவிலேயே இருபத்தைந்தாண்டுகள் வாழ்ந்ததும் எல்லாம் ஒரு பெரிய கனவுபோல இனிமையாக உள்ளன. ஓர் எதார்த்தவாதக்கதையில் இச்சம்பவம் வந்திருந்தால் அதெப்படி என்ற எண்ணம் வந்திருக்கும். ஆனால் காவியநாவல்கள் இதைப்போன்ற காவியத்தருணங்களுக்கு பெரிய இடம் அளிக்கின்றன. அற்புதமான ஒரு ஒரு சந்தர்ப்பம் அது. அவளுடைய நேரடியான அன்பு, நாணமோ அடக்கமோ இல்லாத பேச்சு, காமம் எல்லாமே நாம் எங்குமே பார்க்கமுடியாதவை. ஆனால் எங்கோ பார்த்ததாகவே அணுக்கமகாவும் தெரிகின்றன. புனைவின் மாயம் இதுதான் . இந்தப்பகுதி முழுக்க முக்கியமாக சொல்லவேண்டியது மிகமிக யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது என்பதுதான். நேச்சுரலிஸமாக எழுதப்பட்டுள்ளது. அன்றாடத்தகவல்கள் எல்லாம் நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளன. அங்குள்ள பனி, கம்பிளியின் தூசி ஒளியில் பறப்பது, கொல்லப்பக்க நீரில் பனிக்கட்டி கிடப்பது எல்லாமே அழகாக நேரடியாக உள்ளன. ஏனென்றால் இந்த நம்பகத்தன்மையினால்தான் பிரேமை, யாமா இருவரின் அசாதாரணமான குணாதிசயமும் நம்பகமாக ஆகிறது.

ராஜசேகர்