Tuesday, June 26, 2018

பால்ஹிகரின் கவசங்கள்-1




ஜெ


பால்ஹிகரின் கவசங்கள் பலவகையான அர்த்தங்களை அளிக்கின்றன. அவர் சாவதற்காகவே மலையிலிருந்து கஷ்டப்பட்டு குருக்ஷேதிரம் வருகிறார். ஆகவே அவருக்கு கவசமே தேவையில்லை. அவருக்கே அது பொருளற்றது என்று தெரிகிறது. ஆனால் அவருக்குக் கவசங்கள் மிகவும் பிடித்திருக்கின்றன. அவர் உடலையே இரும்பிலே வார்த்ததுபோல அவை தென்படுகின்றன. தான் இல்லாவிட்டால்கூட கவசத்தின் கால்கள் நடக்குமா என்று அவர் ஐயம் கொள்கிறார். நெஞ்சு தலை என்று தன் உடலையே தானே அணிந்துகொள்கிறார். அந்தக்கவசங்களில் நுழைந்துகொண்டு தன்னை இன்னொருத்தராக மாற்றிக்கொள்கிறார். அதை நினைக்கும்போதுதான் அந்தக்கவசங்களின் அர்த்தமென்ன என்று தெரிகிறது. அது பால்ஹிகரின் குணாதிசயம். அவர் தன் வாழ்நாள் முழுக்க இப்படி ஒரு உருவத்திலிருந்து இன்னொன்றுக்குக் கூடுமாறிக்கொண்டே இருந்தவர்தான். கூடுமாறுவதில்தான் அவருக்கு இன்பம். கூடுமாறியதன் வழியாகத்தான் அவர் இத்தனைகாலம் உயிர்வாழ்ந்தார். பல தோற்றங்களுக்குள் புகுந்துகொண்டு ஒவ்வொரு தோற்றத்திற்கும் உரிய உடல்களை அணிந்துகொண்டிருந்தார். அந்தக்கூட்டுக்குரிய வாழ்க்கையையும் ஆயுளையும் பெற்றார். இது இன்னொரு கூடு அவ்வளவுதான்


சுவாமி