Thursday, July 5, 2018

பீஷ்மர் ஏன் துரியோதனனை ஆதரித்தார்




ஜெ,


பீஷ்மர் ஏன் துரியோதனனை ஆதரித்தார் என்பதற்கு பௌராணிகர்காள் ஏராளமான விளக்கங்களைச் சொல்வார்கள். முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சார்யார் ஒரு கதை சொல்வார். கடைசியில் அம்புப்படுக்கையில் பீஷ்மர் ஏகப்பட்ட நீதிகளைச் சொல்கிறார். கடைசியாக அர்ஜுன்ன் கேட்கிறான். இவ்ளவு நீதி சொல்கிற தாங்கள் ஏன் கெட்டவனான துரியோதனனுடன் இருந்தீர்கள்? அதற்கு அவர் சொல்கிறார் அவன் போட்ட உணவு என் உடலில் இருந்த்து. அந்த ரத்தம் நீ விட்ட அம்பினால் போய்விட்டது புத்தி தெளிந்துவிட்டது என்று. அந்தக்கதையைச் சின்ன வயசிலேயே கேட்கையில் பீஷ்மரைப்பற்றி மகாபாரதம் உண்டுபண்ணிக்காட்டும் கிராண்ட் ஆன சித்திரத்துக்கு அது கொஞ்சம்கூடப்பொருந்தவில்லை என்ற எண்ணம் எனக்கு வந்தது

சப்பைக்கட்டுகள் இல்லாமல் யதார்த்தமாகவும் நேராகவும் ஒரு விளக்கம் பீஷ்மரின் நடத்தைக்கு அளிக்கப்பட்டதில்லை. அவருடைய நடத்தையில் ஒரு தெளிவில்லாத நிலை உள்ளது. அதை முழுசாக இல்லாமலாக்கிவிட்டால் அந்த வசீகரம் போய்விடும். ஆனால் அதை தக்கவைத்துக்கொண்டே இந்த நாவலில் அவருடைய கதாபாத்திரம் ஒரு முழுமையை அடைகிறது. வாழ்ந்த சலிப்பு. அதுவும் பிறருக்காக பிறர் சொன்னபடி வாழ்ந்த அலுப்பு. வாழ்நாள் முழுக்க அவர் பிறருக்கு அளித்த வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றியிருக்கிறார். என்னிடம் தர்மம் என்றெல்லாம் எதையும் கேட்காதே என்று சொல்கிறார். அவர் அந்த சபையில் பேசுமிடம் அவ்வளவு தத்ரூபமாக அமைந்திருந்த்து

சுவாமி