Saturday, July 14, 2018

புழுவும் நாகமும்




அன்புள்ள ஜெ

குண்டாசியை காமரூபத்தின் மண்ணுளிப்பாம்புக்கு விகர்ணன் உவமை சொல்கிறான்.

காமரூபத்தில் மண்புழுவைப்போன்ற பாம்பொன்று உண்டு என்கிறார்கள். மிகச்சிறிது, மண்ணோடு மண்ணாக நெளிவது. பாம்பிற்குரிய விரைவோ அழகோ இல்லாதது. துயிலும் விலங்குகளை அணுகி அவற்றின் செவிக்குள் அவையறியாமல் மெல்ல நெளிந்து நுழைந்துகொள்ளும். அங்கு நச்சு கக்கி அவற்றை பித்தெழச்செய்து கொல்லும். அவை மட்கி மறைவதுவரை உள்ளேயே வாழும். நஞ்சினால் அது நாகம், மெய்யில் ஒரு புழு

இத்தகைய உவமைகள்தான் வெண்முரசின் கதையோட்டத்துக்குச் சமானமாக கவிதையையும் உருவாக்கி நிலைநிறுத்துகின்றன. அந்தக்கவிதை வழியாக வெண்முரசை இன்னும் ஆழமாக வேறு ஒரு தளத்தில் புரிந்துகொள்கிறோம்

பாம்பே ஒருவகை புழுதான், தன்னை புழுவென்று உணர்ந்ததனால்தான் அது நச்சை ஈட்டிக்கொண்டது

என்று குண்டாசி பதில் சொல்கிறான். குண்டாசி தன்னைப்பற்றிச் சொல்லும் மிகச்சிறந்த வரி இது. இதைவைத்துத்தான் அவனைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடிகிறது


ஆர்.ரமேஷ்