Tuesday, January 5, 2016

வாழ்வின் சுவையறிந்தவன்-வெய்யோன்-12




“ஒருவர் மீது வெறுப்பை நூறுசதவீதம் காட்டுகின்றோம், அன்பை பத்துசதவீதம்கூடக் காட்டத்தயங்குகின்றோம்” என்று சத்குரு ஜக்கிவாசுதேவ் சவாமிகள் கூறுவர்.

கோபம் வெறுப்பு பொறாமை கடும்சொல் அனைத்தும் எங்கோ ஆழத்தில் மறைந்து இருப்பதுபோல் தோன்றுகின்றது ஆனால் குறிதவறாத அம்புபோல் வந்த சுவடே தெரியாமல் இலக்கை தாக்கிவிட்டுகின்றது. தாக்கும்போதும் தாக்கப்படும்போதும் கோபம் வெறுப்பு பொறாமை கடும்சொல் எங்கோ இல்லை, மிக அறிகில் முன்னால் உள்ளது தெளிவாகிறது.  

அன்பு பொறுமை கருணை பக்தி எல்லாம் மேலே மிக அருகில் இருப்பதுபோல் தோன்றுகின்றது தேவைப்படும் தருணத்தில் அவைகளை கண்டெடுப்பது எத்தனை கடினமாக இருக்கிறது.  கொடுக்கும்போதும் கொள்ளும்போதும் அன்பு பொறுமை கருணை பக்தி இவைகளை இயல்பாய் வழங்கமுடிவதில்லை, தேடி கசக்கி பிழிந்து உழைத்து காலத்தை செலவு செய்து வழங்கவேண்டி உள்ளது. 

அர்ஜுனன் சுபத்திரையைக் காணவரும்போது சுபத்திரை மகனும், திரௌபதி மகனும் குதிரைமீது ஏறிச்சென்று கலிங்கத்து இளவரசியை சிறையெடுத்து வருவதைப்பற்றி அடிக்கடி அர்ஜுனன் இடம் சொல்வார்கள். இது கர்ணன் கலிங்க இளவரசியை சிறை எடுத்து வந்து இளையமனைவியாக்கிக் கொண்ட கதை, இந்த கதையை மீள மீள குந்திக்கேட்பதால் குழந்தைகள் கர்ணன்போல் ஆக ஆசைப்பட்டு கலிங்க அரசியை சிறையெடுப்பதை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

அப்போது அர்ஜுனன்  சொல்வான் //இளவரசி என்று இவர்கள் எதை சொல்கிறார்கள் என்றே தெரியவில்லையே. ஏதாவது எருமையோ பசுவோ ஆக இருக்குமோ?” என்றான் அர்ஜுனன். செவிலி வெடித்து நகைக்க வாய் பொத்தி சுபகை சிரித்தாள்.//-காண்டீபம்-73

மனிதன் பெண்ணை ஏதோ ஒரு பொருளாகப்பாவித்து மணந்துக்கொள்கிறான். அதுபொருள் அல்ல என்று ஒவ்வொரு நாளம் புரிந்துக்கொண்டே இருக்கிறான். அது வாழ்விக்க வந்த அமுதமாகவோ அல்லது சாகடிக்க வந்த விடமாகவோ இருப்பதை அறிகிறான். பெண் அமுதாக இருப்பதற்கம் விடமாக மாறுவதற்கும் ஆண் எந்தவிதத்திலாவது காரணமாக இருப்பதை ஆணும் அறிவதே இல்லை. அமுதம் என்று அதில் மூழ்கிவிட முடியாமலும், விடமென்று தப்பித்துக்கொள்ள முடியாமலும் செய்கிறது வாழ்க்கை.

“அவசரமாக கல்யாணம் கட்டி, சாவகாசமாய் சங்கடப்பட்டான்” என்றொரு பழமொழிச்சொல்வார். இது கர்ணன் வாழ்வில் சரியாக உள்ளது.
நடிப்பவர்கள் இடையில் நடிக்காதவன் படும்பாடு மரணத்தைவிடக்கொடியது. மனிதத்தன்மையோடு இருக்கநினைப்பவனை மனிதத்தன்மையே இல்லாதவர்கள் சோதிப்பதுதான் வாழ்க்கையின் ஆதிசுவை செய்யும் சூழ்ச்சி.

வாழவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர்கள்தான் மனிதத்தன்மையே இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். வாழவேண்டும் என்ற ஆசைதான் அவர்களோடும் மனிதத்தன்மை உள்ளவர்களை வாழ வைக்கிறது.

அரியணை மறுக்கப்பட்டதால் வெறுப்பை உமிழும் முதல்மனைவியும், குலம் குறைந்ததால் வெறுப்பை உமிழும் இரண்டாம் மனைவியும், கர்ணனை ஒரே இடத்திலேயே நிருத்துகிறார்கள். இது ஊழ் என்று நினைக்கிறோம். உண்மைதான் ஆனால் அது மட்டுமா உண்மை? தாங்கள் மனித தன்மை அற்றவர்கள் என்பதை அவர்கள் மனித வடிவத்தாலேயே முன்நிருத்திக்கொள்கிறார்கள். 

கர்ணன் வாழ்க்கையின் மீது உள்ள சுவைாயால் இருமனைவியரின் வாசல்படியில் நி்ற்கிறான். கர்ணனைவிட வாழ்க்கையின் சுவையறிந்தவர் யார்? தாயால், தந்தையால், மனைவியால் கைவிடப்பட்டவன் அறியாத வாழ்க்கையின் சுவை வாழ்க்கையில் இருக்குமா? புரிந்துக் கொள்ளப்படாதவன் இதத்தில்தான் புரிந்துக்கொள்ளும் கருணை இருக்குமோ? கள்ளியில் பிறந்தாலும் மலர் கள்ளிப்பால் வடிப்பதில்லை, தேனைத்தான் வடிக்கிறது. 


அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்