Sunday, April 15, 2018

தத்துவப்பகுதி




ஜெ

இமைக்கணத்தின் தத்துவப்பகுதியை வாசிக்கும்போது பலருக்கும் சிக்கல்களை இருப்பதைக் காணமுடிகிறது. என் நண்பர்கள் நால்வரும் பேசிக்கொள்வோம். என்ன சிக்கல் என்றால் ஒன்று விவாதமாக வரவேண்டும். அல்லது உணர்ச்சிகரமான பேச்சு. அல்லது நீண்ட கட்டுரை. இதெல்லாம் இல்லாமல் பழைய சூத்ரநூல்களின் வடிவில் இந்தப்பகுதி அமைந்துள்ளது. வரிவரியாக வாசிக்காமல் பத்திபத்தியாக வாசித்தால் மூளையில் எதுவும் பதிவதில்லை


என்பது ஒரு தனி வரி. அதன்பிறகு இது ஏன் என்று கேட்டால்தான் அடுத்த வரி. நாம் பிறருடைய அறிவை எதிர்த்து விவாதிக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் விவாதத்தில் என்ன செய்கிறோம். சொல்லுக்குச் சொல் வைக்கிறோம். எல்லா சொல்லுக்கும் மறு சொல் உண்டு

சொல்லுக்கு சொல்வைப்பது சொல்லை மறுப்பது மட்டுமே.

அடுத்த வரியே முதலிரு வரிகளின் முடிவு

வெற்றுச்சொல்லில் மகிழ்வதே அறிவுநாடுபவனின் இருட்டறை

தப்போ சரியோ நம் தரப்பை சரியாக வகுத்துச் சொல்லிவிட்டோம் என்று நினைப்பதும் தர்க்கங்களில் சந்தோஷப்பட்டுக்கொள்வதும்தான் அறிஞனை முட்டாளாக ஆக்குகிறது

பெருநதியின் நீர்ப்படலத்தில் விளையாடும் நீர்ச்சறுக்கிப் பூச்சிகள் நீரிலிருந்து விடுபட்டவை. அவை மூழ்குவதோ அலைக்கழிவதோ ஒழுகுவதோ இல்லை. நோக்குக, அவை நதியை அறிவதுமில்லை

என்றவரி அதை தொகுத்து ஒரு கவித்துவமான முடிவை அளிக்கிறது

சாரங்கன்