Monday, April 30, 2018

யுதிஷ்டிரர்


அன்புள்ள ஜெயமோகன்,
        

 எழுத உங்களுக்கு மட்டும் இமைக்கணம் அதிக நேரம் 
எடுத்துக் கொள்ளவில்லை;வாசிக்க எங்களுக்கும்தான்.
தெரியாமல் ஒரு முடிவெடுத்து விட்டேன் வெண்முரசு 
பயிலும் போது மிகவும் முக்கியமான வாக்கியங்களை 
ஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொள்வதென்று.இளைய யாதவரின் 
சொற்களில் ஒவ்வொன்றுமே அற்புதமாக உள்ளபோது எதை 
விடுவது?எப்படியும் பாதிக்கு மேல் எழுத வேண்டியுள்ளது.
        

 வெண்முரசில் எனக்கு மிகவும் பிடித்தது இமைக்கணம்தான்.
அடுத்து சொல் வளர் காடு. மகாபாரதத்தில் மரியாதைக்குரிய 
கேரக்டர் தர்மர்.ஆனால் அவரை பீமன் மூலம் நீங்கள் மிகவும் 
கேலி செய்வது போல் தோன்றும்.இப்போது அவருக்கு மிக 
அணுக்கமான சகதேவனும்.அவருடைய சோர்வும்,அறம் பிழைத்து 
விட்டதோ என்ற கையறு நிலையும் என்னை மிகவும் பாதித்தது.
ஆனால்,ஒரு அறத்தான் ஏன் பிறரால் விரும்பப் படுவதில்லை 
என்பது மிக தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. 
ஒவ்வொரு முக்கிய பாத்திரத்தையும் இளைய யாதவர் மூலம் 
புதிய கோணங்களில் அலசியிருக்கிறீர்கள்.
           

கடந்த ஒரு மாத காலத்தில் புல்  வெளி தேசம்,முன் சுவடுகள்,
இன்று பெற்றவை,தெய்வங்கள்,பேய்கள்,தேவர்கள் நான்கும் 
படித்தேன்.படிக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் கடிதம் எழுதாததால் 
படிக்கவில்லை என்றோ,எழுத எதுவுமில்லை என்றோ அர்த்தமில்லை 
என்று நீங்கள் அறிவீர்கள்.தஞ்சைக்காரர்கள் அதிகம் கடிதம் 
எழுதுவதில்லை என்பது உண்மைதான்.
          

பல்வேறு அழுத்தங்களால் சமகால செய்திகளை ஓராண்டு 
துறத்தல் என்பது நல்ல முடிவே.ஓராண்டுக்குப் பிறகு பெரிதாக 
ஒன்றும் மாறியிருக்காது என்றே நினைக்கிறேன்.நன்றி.


சாந்தமூர்த்தி,


மன்னார்குடி.