Saturday, September 5, 2015

கிருஷ்ணன் எனும் மர்மம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு....
.
உங்களின் வெண்முரசு நாவலின் தீவிர ரசிகன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்.ஒரு நாவலை கட்டாயப்படுத்தி ஒருவரிடம் படிக்கவைக்க விரும்பினால் நிச்சயமாக அது வெண்முரசாகத்தான் இருக்கும்.அவ்வளவு அற்புதமான ஆக்கம் .அதுவும் உங்கள் எண்ணங்களினால் மிளிர்கிறது.இப்போது இந்திரநீலம் நிறைவடைந்திருக்கிறது.அதை நினைக்கையிலேயே பெரு மகிழ்ச்சி உண்டாகிறது.செப்டம்பர் பதிநைந்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.வெண்
முரசு நாவல் வரிசையிலேயே வேண்டாவெறுப்பாக படித்த இருப்பகுதிகள் நீலமும் இந்திரநீலமும்தான்.அதுவும் நீலத்தில் சுமார் பத்து நாட்களை படிக்காமலே கடந்துவிட்டேன்.அதற்கு காரணம் கண்ணன் துதிதான்.ஓரளவுக்கு யாதார்த்தமாக கதை பொய்கொண்டிருக்கையில் கண்ணனின் கதைகள்தான் சலிப்பை ஏற்படுத்திவிட்டது.அவர் கடவுள் என்பதை நிறுவுவதற்காகவே இந்த முன்னுரிமை என்றே எண்ணத்தோன்றுகிறது.பீஷ்மர்,துரோணர் போன்றோரின் தர்ப்பை புல் வித்தைகளை ஓரளவுக்கு என்னால் ரசிக்க முடிந்தது. ஆனால் கண்ணனின் கழுத்தை வெட்டும் படையாளியைதான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.மற்றபடி வேறெந்த குறையும் என்னடமில்லை.


வெண்முரசில் என் நாயகர்கள் என்றால் அது திருதாஷ்டிரரும்,துரியோதனும்,துச்சோதனும்தான்.இவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதற்காக மட்டுமல்ல அவர்களின் பாத்திரத்தை வெளிப்படுத்திய உங்களின் விதத்தாலே அவர்கள் கவர்கிறார்கள்.மேலும் சமீபத்திய என்னுடைய சின்ன லட்சியங்களில் ஒன்று வெண்முரசு நாவல் வரிசைகள் அத்தனையும் வாங்கிவிட வேண்டுமென்பதுதான்.ஏழையான என்னால் சிறிது தாமதத்தின் பேரிலேயே வாங்கமுடியும் ஆனால் வாங்கிவிடுவேன்.என் மிக நெருங்கிய நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ ஏதேனும் பரிசு கொடுக்கும் சூழ்நிலை வந்தால் வெண்முரசு நாவலைத்தான் கொடுக்கவேண்டுமேன நினைத்திருக்கிறேன் .அனைவர் வீட்டிலும் இருக்கவேண்டிய பொக்கிசம்தான் வெண்முரசு.எங்களுக்கு நீங்கள் அளித்தப் பரிசுக்கும் நன்றி.மஹாபாரதத்தை நீங்கள் வெண்முரசாக இணயத்தில் எழுதாமலிருந்தால் என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான எளியவர்களுக்கு மஹாபாரதத்தின் சுவை தெரியாமலே சென்றிருக்கும் .உங்கள் உழைப்புக்கு கோடி நன்றிகள்...
.
.
பிறின்ஸ்


அன்புள்ள பிரின்ஸ்

வெண்முரசில் நாயகர்கள் என எவருமில்லை. அந்தந்த தருணங்களில் அதற்குரிய நாயகர்கள் உருவாகிறார்கள், அவ்வளவுதான். அவர்களின் சிக்கல்களைச் சொல்ல முற்படுகிறேன்

ஆனால் இந்நாவல் யதார்த்தவாத நாவல் அல்ல. புராணம். அல்லது நவீன ஃபேண்டசி வகை நாவல். இத்தகைய நாவல்களுக்குரிய அழகியலே இதில் உள்ளது. ஒரு பகுதி கறாரான வரலாற்றுக்குள் இருக்கும். இன்னொரு பகுதி கற்பனையான குழந்தையுலகுக்குள் இருக்கும். ஒருபகுதி துல்லியமனா மானுட உளவியலுக்குள் இருக்கும். இன்னொரு பகுதி குறியீடுகளால் ஆனதாக இருக்கும். இந்தக்கலவையே இதன் அழகியல்

கிருஷ்ணன் இந்தியப்பண்பாடு உருவாக்கிய ஒரு பெரிய மர்மம். வரலாற்று மர்மம் . அந்த மர்மத்தை எல்லா கோணத்திலும் சென்று தொடுவதற்கான முயற்சி வெண்முரசு. மர்மத்தை அவிழ்க்க, அல்லது சமகாலச்சூழலில் வைத்து விளக்க நான் முயலவில்லை. அந்த மர்மம் எப்படி உருவாகியிருக்குமென காட்ட மட்டுமே முயல்கிறேன்

ஜெ