Thursday, September 3, 2015

ம்காலிங்கமும் பிரபஞ்ச மையமும்


மகாபாரதத்தின் எளிய மனிதர்கள் அவர்களின் உணர்வால், எண்ணங்களால் வெண்முரசில் வளர்ந்து உச்சம் பெறுகிறார்கள் என்றால் அது மிகை இல்லை. ஆனால், இந்திரநீலத்தில் எளிய மனிதர்கள் பலர்  சிற்பங்களாக செதுக்கப்பட்டு, அணிகள் அணிவிக்கும் அழகிலேயே அஷ்டலெட்சுமிகள் என ஒளிகொண்டு, ஒன்றிணைந்து வான்தொடும் பொன்தேரென இதயவீதியில் ஓடிவருகிறார்கள். .

எளிய மனிதர்களைப்பற்றி நூல் என்றோ, அஷ்டலட்சுமிகளின் பொருள் என்றோ எளிதில் இதைப்பற்றி பேசிவிடமுடியாமல்,  உலகம் தோன்றிய நாள்முதல் உயிர்த்து தழைத்து பூத்து கனிந்து வனமென மாறிக்கொண்டே இருக்கும் காதலை, நட்பை, வாழ்க்கையின் இருண்டபாகமான விழைவை, ஒளிப்பாகமான பக்தியை பெரிதென பேசுகின்றது இந்திரநீலம்.

கண்ணனின் மகாமானிடதன்மையை மட்டும் அல்ல அவனின் மகாயோகிஸ்வரன் நிலையையும் வெளிக்கொண்டு வந்து அழகுப்படுத்துகின்றது இந்திரநீலம்.

இந்திரநீலத்தில் கண்ணன் இந்த நாவலின் மையமென்ற வரியை அள்ளி நம்முன் வைக்கிறான். இந்தநாவலின் மையம் என்று மட்டும் அதைச்சொல்லிவிட முடியாது. இந்த பிரபஞ்சத்தின் மையமும் அந்த வரிகள்தான்.

வேதாந்த சிந்தனைகளை வாழ்க்கையில் தேடத்தொடங்குபவன் காலத்தை வீணடிக்கிறான். அவை பாதி உலகிலும் மீதி உள்ளத்திலுமாக முழுமை கொள்கின்றன-இந்திரநீலம்-90

இ்ந்த உண்மையை கண்டு அடைந்து அதை வாழ்வில் சரியாக பயன்படுத்தும் மானிடன்.
கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்கு தக-என்று வள்ளுவன் சொல்லும் குறளுக்கு வித்தாகின்றான். கற்றும் கற்றப்படி நிற்க முடியாதவன், மீனுக்கு வாலையும், பாம்புக்கு தலையையும் காட்டும் விலங்குமீன் ஆகின்றான். விலாங்குமீன் உலகத்தில்தான் ஒற்றைமீன் கண்டு உலகத்தில் யோகிஸ்வரன் என்று மானிடமும் உள்ளது என்பதை நிலை நிறுத்துகின்றது இந்திரநீலம்.


கண்ணன் சொல்லும் வேதாந்த வாழ்க்கைப்படி, காதலின் பாதி வெளியில் இருக்கிறது, காதலின் மீதி அகத்தில் இருக்கிறது. அகக்காதலை பெண்  வடிவமைக்கிறாள், புறக்காதலை ஆண் வடிவமைக்கிறான். அகமும் புறமும் இணையும் அந்த மையத்தில் நிற்கும் ஆணும், பெண்ணும் என்றும் காதலில் இருக்கிறார்கள். அவர்கள் தளர்ந்த வயதிலும் அந்த முதல் காதல் கணத்திலேயே இருக்கிறார்கள். அப்படி இருக்கமுடியாதவர்கள் பருவவயதிலும் ஒருவருக்கு ஒருவர்சுமையென்றாகி துன்பப்படுகிறார்கள். காதலை அகத்தில் கட்டமைத்த சுஃப்ரையால் புறத்தை கட்டமைக்க முடியவில்லை. காதலை புறத்தில் கட்டமைத்த திருஷ்டத்யுமனால் அகத்தை கட்டமைக்கமுடியவில்லை. அவர்கள் இணையும்போதே அது மையத்தை அடையும். காளிந்தியும் கண்ணனும் இணைந்ததுபோல் அது. இந்த உண்மையை அறிய திருஷ்டத்யுமனுக்கு கண்ணன் காளிந்தி கதை வேண்டி உள்ளது. இந்திரநீலம் வேண்டி உள்ளது.

மனிதர்கள் கொள்ளும் நட்பு என்பது புறத்தில் கட்டமைக்கப்படுகிறது. புறத்தில் கட்டமைக்கப்படும்போதே அகத்திலும் அது பாவனையாக கட்டமைக்கப்படுகிறது. புறத்தில் கட்டமைக்கப்படும் நட்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் இடித்து நொருக்கி மாத்தி மாத்தி கட்டமைக்கப்படுகிறது. இந்த புறக்கட்டமைப்பைத்தாண்டி அகத்தில் எழும் பாவனை நட்பு அங்கேயே நிலைக்கிறது. நிலைத்தப்படியே வளர்கின்றது. அகமும் புறமும் இணையும் அந்த மையத்தில் வந்து நிற்கும் நண்பர்கள். நண்பர்களாகவே நிலைக்கிறார்கள். புறத்தில் ஏற்படும் சிதைவுகளைக்கொண்டு அகத்தையும் சிதைத்து சிதைத்து அடுக்குபவர்கள் மையம் கிடைக்காமல் சிதைகிறார்கள். கண்ணனும், பார்த்தனும் எத்தனை எத்தனை புறக்கட்டுமானத்தில் மாற்றம் கண்டாலும் அகத்தில் இருக்கும் நட்பை தக்கவைப்பதாலேயே என்றும் நண்பர்கள் என்றே வாழ்கின்றார்கள். திருஷ்டத்யுமனனும், சாத்யகியும் அந்த உள் உலக பிணைப்பை அறியும் தருணத்தில் நட்பின் மையத்தை அடைந்து பார்த்தன், கண்ணனெ ஆகின்றார்கள். அதற்கு இந்திரநீலம் வேண்டி உள்ளது.  

கண்ணனின் எட்டு மனைவியரும் எட்டுவகை வாழ்க்கையில் இருக்கிறார்கள். அவர்கள் எட்டுவகை வாழ்க்கையும் எட்டுவகை சியமந்தகமணி ஒளி என ஒளிர்கிறது. அந்த ஒளியின் வழியாக அவர்களின் குணங்கள் வெளிப்படுகின்றது. குணங்கள்வழியாக அவர்கள் விழைவை, வாழ்க்கையை அமைக்கிறார்கள். புறத்தில் அமைக்கும் அந்த வாழ்க்கை புறத்தோடு மட்டுமா உள்ளது? அதுதான் அவர்களின் அகவாழ்வாகவும் இருக்கிறது. அகம் அறியமுடியாமல் அவர்கள் அணைவரும் புறம் அறிந்து பூசல்கொண்டு இருக்கிறார்கள். கண்ணன் அவர்களின் புறத்தைக்கொண்டு அகத்தை அறியவைக்கிறான். இந்திரநீலம் அந்த இடத்தில் வந்து அக புற வாழ்க்கையின் கண் என்று நிற்கிறது.  

சியமந்தகமணி கிடைத்தால் பயன் என்று நினைக்கும் ஏழு மனைவியும், அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பயன் என்று நினைக்கும் காளிந்தியும், பயன் என்ற வட்டத்தின்  புறம் என்று இருக்க, சியமந்தகமணி கிடைத்தும் அதை பயன் என்று கொள்ளாமல் அதை கடலி்ல் வீசும் இடத்தில் சுபத்திரை கண்ணனின் பயன் என்ன என்று அர்ஜுனனுக்கு முன்பே காட்டுகின்றாள். பயன் என்ற வட்டத்தின் புறத்தையும் அகத்தையும் இந்திரநீலம் இங்கு மையம் காட்டிச்சுழல்கிறது. 

பார்த்தன், சாத்யகி, குசலன். கண்ணனின் ஏழு மனைவியர், சுபத்திரை என்று அவர்கள் கொள்ளும் புறத்தில் உள்ள பக்தியின் வழியாகத்தான் கண்ணனை அணுகுகின்றார்கள், ஆனால் அகத்தில் உள்ள பக்தி என்பது கறுப்பு திரையிட்ட அறையெனவே இருக்கிறது. அகத்தில் பக்தி இருக்கிறதா? புறத்தின் உருவம், அகத்தில் எழுகின்றதா? எழுந்தாலும் அது அந்த கணத்தின் என நிழல் எழுந்து வருகிறது. அக உலகின் உருவம் துளங்கவில்லை. ஜோதி இல்லை. காளிந்தியின் அகத்தையும், புறத்தையும், கதையென விளக்கும் இடத்தில் கண்ணன் அனைவர் இதயத்திலும் ஜோதிதரிசனம் செய்து அகஉலக உருவை, அகப்பக்தியை காட்டுகின்றான்.  இந்த அகபக்தியை அறியும் தருணத்தில் இருந்து திருஷ்டத்யுமனனும் கண்ணனை அகத்திலும் முழுமையாக குடிவைக்கிறான். கண்ணனை தன் கடவுள் என்று முழுதாக வைத்ததால் கண்ணனின் சொல்லை தன் தெய்வத்தின் சொல் என்கிறான்.  திருஷ்டத்யும்னன் மெய்ப்பு கொண்டான். மெல்லிய குரலில்அது என் தெய்வத்தின் சொல்என்றான்-இந்திரநீலம்-92. அக புற பக்தியின் மையம் என்று இங்குவந்து இந்திரநீலம் ஒளிவிடுகின்றது.

விஞ்ஞானம் புற உலகத்தை கட்டமைத்து புற உலகத்தை நிறுபிப்பதோடு நின்றுவிடுகின்றது. மெய்ஞானம் புற உலகத்தை கட்டமைக்கும்போதே, அக உலகத்தையும் ஒளிக்கொண்டு கட்டமைக்கிறது.விஞ்ஞானம் அறிந்தவன் பாதி உண்மையை மட்டும் அறிந்தவன், இந்த உலகம் தட்டை என்று வாதிடுபவன். மெய்ஞானம் அறிந்தவன் முழு உலகத்தையும் அறிகின்றான், இந்த உலகம் உருண்டை என்கிறான். அங்கு ஒரு தட்டையான புவியில் ஒரு வளைந்த ஆகயம் வந்து அமர்ந்து லிங்கம் என்று தன்னை தரிசி்க்கச்சொல்கிறது. இது இந்திரநீலம் காட்டும் லிங்கதரிசனம்.

இந்திரநீலம் வாழ்க்கையின் மையத்தை காட்டி, ஒவ்வொரு தொடக்கமும் மையம் என்று சொல்லி, ஒவ்வொரு மையமும் வாழ்க்கை உருண்டையின் அச்சென்று  சொல்லி, வாழ்க்கை தட்டையாய், உருண்டையாய் ஒன்றன்மீது ஒன்று அமர்ந்த லிங்கம் என்று காட்டும்போது இந்திரநீலம் லிங்கத்தின் முன் வைக்கப்ட்ட தீபம் என்று ஒளிகிறது. .

இந்திரநீலம் வாழ்க்கையின் புற உலக உணர்வுகளாகிய விஞ்ஞானத்தையும், அக உலக உணர்வுகளாகிய மெய்ஞானத்தையும் இணைக்கும் முழுமையான நூல். ஜெவின் ஈடு இணையற்ற உழைப்பால் விளைந்த அற்புத பொக்கிஷம். வெண்முரசு ஆறுநூல்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு, இ்ந்த நூல் எழுதும்போது ஜெ  இந்தியாவின் மறு எல்லலையில் இருக்கும் அமெரிக்காவிலும் கால்பதித்து இருந்தார் என்பதுதான்.  நதியின் தொடக்கம் அதன் மையம் என்ற வேதாந்த கருபொருள்  இங்கு நினைவில் வந்து நிறைகின்றது. இதுவும் கண்ணனின் லீலையில் ஒன்று.  இந்திரநீலம் புறத்தில்தான் ஒரு சொல், அகத்தில் அது பிரபஞ்ச மையம். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.