Thursday, September 22, 2016

கந்தமாதனம்



அன்புள்ள ஆசிரியருக்கு,

சொல்வளர்காடு –இறுதி பகுதிகள் மெய்சிலிக்கசெய்தது,அதிலும் தருமன்
ஒளிக்கொண்டு நிற்க்கும் காட்சி,மூலபாரதத்தில் தருமன் சூரியதேவனிடம்
அட்சயபாத்திரம் பெறும் தருணத்தை,அற்புதமாய்மாற்றியமைத்துவிட்டீர்கள்,வெண்
முரசில் தருமனே அட்சயபாத்திரமாய்மாறுகிறார்.

ஒரு சந்தேகம் நாவலில் குறிப்பிடபடும் கந்தமாதனம் என்னும் மலை உண்மையில்
இருக்கிறதா?அரசன் மஹாபாரதத்தில்,கயிலை மலையையே கந்தமாதனம் என்று
கூறபடுகிறது,இணையத்தில் தேடியதில் தேவார வைப்பு தலமான கந்தமாதனம் என்பது
செந்தூரில் உள்ள மணல்குன்று ,தனுஷ்கோடியில் கந்தமாதனம் என்ற
மலையிருக்கிறது,கந்தபுராணத்தில் வீரவாகு கந்தமாதன மலையிலிருந்து
வீரமகேந்திரபுரிக்கு பறந்து சென்றதாக உள்ளது.உண்மையில் அனலை கக்கும்
கந்தமாதனம் எங்குள்ளது?விளக்கம் கிடைத்தால் மகிழ்வேன்.

இப்படிக்கு
குணசேகரன்
 
அன்புள்ள குணசேகரன்
 
கந்தமாதனம் மகாபாரதத்தில் உள்ள மலை. கந்தம், கந்தகம் ஆகிய சொல்வேர்களைக்கொண்டு நோக்கினால் அது எரிமலை. எரி உமிழ்கிறது. இடியோசை எழுப்புகிறது. முகில்சூடி அமர்ந்திருக்கிறது
 
மகாபாரதத்தில் அது இருக்குமிடம் தெளிவாக இல்லை. பல இடங்களில் இருப்பதுபோல அது தெரிகிறது.
 
பின்னர் அதை ஒரு புராண உருவகமாக ஆக்கிக்கொண்டு எல்லா இடங்களிலும் அதை காண ஆரம்பித்துவிட்டார்கள்.

அது ஒரு தொன்மையான எரிமலையாக இருக்கலாம். மகாபாரதக் காலகட்டத்திலேயே அது எரிவது நின்று தொன்மமாக ஆகியிருக்கலாம். ஆகவேதான் அது ஒரு மலையாக அன்றி குறியீடாகவே மகாபாரதத்திலும் வருகிறது
 
ஜெ