Thursday, September 22, 2016

சொல்வளர்தல்



ஜெ,

சொல்வளர்காட்டை விரிவாக விவாதிக்காமல் தொகுத்துக்கொள்ள முடியாது என நினைக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே வந்துகொண்டிருக்கும் கதைகள் நுட்பமாக கோக்கப்பட்டிருக்கின்றன என தெரிகிறது எல்லா விசயங்களும் பிடிபடவும் இல்லை.

அத்தனைபேரும் ஒரு குருகுலத்தில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். அவரவர்களுக்குரியதைக் கண்டுபிடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதேசமயம் எங்கேயுமே போகாமல் எதையுமே தேடாமல் கிண்டல் மட்டும் செய்துகொண்டிருக்கிறார்கள் சூதர்கள்

தந்தை மகன் உறவு பலகோணங்களில் உள்ளது. மகனை பெற்றுவளக்கும் தந்தை, மகனைக் கொல்லும் தந்தை, மகனை சீடனாகக் கொண்ட தந்தை இப்படி [நான் மார்க்கண்டேயர் கதையை எதிர்பார்த்தேன்]. யமன் வருமிடத்தில் அதற்கான ஸ்கோப் இருந்தது

அதேபோல குருசீட உறவு பலநிலைகளில் பேசப்படுகிறது. குருநாதர்களிடமிருந்து பிரிந்துசெல்கிறார்கள். தாகத்துடன் வந்துசேர்ந்தபடியே இருக்கிறார்கள்

கடைசியாக பல்வேறு ஞானமார்க்கங்கள். ஆனால் அவை ஒன்றுடன் ஒன்று இந்நாவலுக்குள் உரையாடவே இல்லை. இது மிக ஆச்சரியமானதாக உள்ளது

வேணுகோபாலன்