Tuesday, September 20, 2016

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்குமான உறவு



அன்புள்ள ஜெ

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்குமான உறவு இனிமேல்தான் விரிவாக வரப்போகிறது. ஆகவே ஏன் கிருஷ்ணன் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விக்கு இப்போதே பதில் தேடவேண்டியதில்லை. ஆகவே ஒருவாசகர் எழுதிய கடிதம் இப்போது பெரிதாக விவாதிக்கத்தக்கது அல்ல

கிருஷ்ணனுக்கு ஒரு நோக்கமிருக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது நாவலில். அந்த நோக்கம் மிகப்பெரியது. அதற்கு அவன் அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்தான். கூடவே பீமனையும்தான். பீமன் தான் கிருஷ்ணனின் வழிகாட்டலின் பேரில் ஜராசந்தனையும் பின்னர் துரியோதனனையும் கொல்கிறார்.

அர்ஜுனனுக்கு பதில் வேறு யாரை அவன் தேர்ந்தெடுத்திருக்கமுடியும்? கர்ணன் வன்மம் கொண்டவன் துர்யோதனன் மண்ணாசை கொண்டவன். அர்ஜுனனே தனக்கென எந்த நோக்கமும் ஆசையும் பற்றும் இல்லாத மாவீரன் இல்லையா?

ஏன் அர்ஜுனன் தேவை? கிருஷ்ணன் தெய்வம்தானே என்று கேட்கலாம். வெண்முரசிலே அப்படி இல்லை. அவன் யாதவ அரசன் மட்டும்தான். அவனுக்கு ஷத்ரியர்களைவெல்ல வலிமையான துணைதேவை

சாரங்கன்