Tuesday, January 12, 2016

காண்டீபம்


இந்த நாவலின் உச்சம் அரிஷ்ட நேமியும் - அவரைத் தொடர்ந்த நிகழ்வுகளும். எனினும் சாகசமும் நுண்ணிய சிந்தனையும், நிறைந்த நாவல். அங்கங்கே விராட ரூபமும் மக்களின் விழைவும் அதனைச் சார்ந்த பாத்திரங்களின் சிந்தனை ஓட்டங்களும். உங்கள் தலைப்புகள் எவரை பற்றி என சிந்திக்க சீண்டும். உதாரணமாக - தேரோட்டி என்கிற காண்டீபம் - சுவாரசியமாக சுபத்திரா தேரோட்ட அற்புதமான துரத்தல் காட்சியில் அதிர்ந்தது. 

பின்னால் எழுதப் போவதை எண்ணி சித்தரிப்பது போல அபிமன்யு சித்தரிக்கப் பட்டிருக்கிறான்.

உங்கள் எழுத்து, சமீப காலமாக திரைக்கதை போல - காட்சி ஒளியால் விரிவதும், கருமையில் சுருங்கவதுமாக.. உங்கள் திரைத் தொடர்பின் தாக்கமோ! - மிக சிறப்பு. உங்கள் எல்லா பாத்திரங்களும் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள். நன்றாக வெளிப்படுத்துகிறார்கள். எல்லா பாத்திரங்களும் மாமனிதர்களாக.. குறைந்த பட்சம் அந்த விழைவுடன் உலா வருகிறார்கள். 

சற்றும் முன்னும் பின்னுமாக சென்றாலும், இன்று பீஷ்மரின் உரை.. பலமுறை படித்தேன். அவரை மீறிச் செல்வதுதான் எவ்வளவு கடினம்.

கர்ணன் எதோ ஒருவகையில் 'தானம் தப:' என்கிற வாக்கியத்தை தன வாழ்க்கையினுள் எழுதிக் கொண்டு விட்டான். அவன் மாபெரும் வீரனாக இருந்தாலும், தானம் செய்யும் தவ வலிமை மேலோங்கப் போகிறது என்பது அனைவரும் உணர்வரோ என்றே தோன்றுகிறது. முதன் முதலில் தருமன் கண்டு பிடித்துவிட்டான். பீமனுக்கு கடைசி வரை தெரியாதோ எனத்தோன்றுகிறது. அர்ஜுனனுக்கு வாய்க்கலாம். சகதேவனுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.  மிகுந்த ஆவலுடன் தினமும் வாசிக்கிறேன்.
 
முரளி