Wednesday, November 2, 2016

கற்பென்பது வாழ்நெறி







கற்பென்பது வாழ்நெறி.   கற்கும் கல்விக்கேற்ப, இருக்கும் மதத்திற்கேற்ப, தங்கியிருக்கும் சமூகத்திற்கேற்ப, பின்பற்றும் தத்துவத்திற்கேற்ப, ஆண்டுகொண்டிருக்கும் அரசுக்கேற்ப பல்வேறு நெறிகள் எனும் அரண்களுக்குள்ளே வசிக்கிறோம்  அல்லது அந்த நெறிகளை அணிகலன்கள் என அணிந்து கொண்டிருக்கிறோம்.

     அந்த வாழ்நெறிகளை நம்மை காக்கும் கோட்டைகள் என்று கூறிக்கொண்டாலும், அவற்றை  நாம் அணிகலன்கள்  என்று சொல்லி அணிந்துகொண்டாலும் உண்மையில் நம்மை அடைத்து வைத்திருக்கும் சிறைகளாகவும், நம்மை கட்டுபடுத்தி பூட்டி வைத்திருக்கும் விலங்குகளாகவும் அவை இருக்கின்றன

   ஆனால் அவற்றை நாம் சிறைகளென விலங்குகளென அறிவதில்லைஅப்படி அறிந்தாலும் அதை தவிர்த்து சென்று அடையும் வாழ்க்கைபற்றி நமக்கு அச்சமிருப்பதால் அதைப்பற்றி நாம் சிந்திப்பதில்லை. இதுவே உகந்தது, இதுவே சரியானது. இதை நாம் மீறக்கூடாது  என   நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம். மற்றவரையும் அதை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துகிறோம். அந்த நெறிகளுக்கு புனிதத்தன்மையை கற்பித்து நாமும் நம்பி பிறரையும் நம்பச் சொல்கிறோம். இன்னும் மேலாகச் சென்று அவற்றை தெய்வங்கள் என வணங்கத் தொடங்குகிறோம்.  

   ஒருநாள் வருகிறான் அந்தக் காட்டாளன்.   ஆடைகளற்று, அணிகலன்களற்று  எவ்வித அலங்காரங்களற்று  வெற்று உடம்போடு  புழுதி பறக்க ஆர்ப்பாட்டமாக வருகிறான். அவனை அஞ்சுகிறோம். அவனின் கண்பார்வையில் படாமல் ஒளிந்துகொள்ள  முயல்கிறோம்நம் கோட்டைகளை தகர்த்து நம் அணிகலன்களை களைந்து நம்மை அள்ளி எடுத்துக்கொண்டு சென்று விடுவானோ என்று அஞ்சுகிறோம். இதுவரை நாம் காத்து வந்த  கற்பு பறிபோய்விடுமோ என்று நடுங்குகிறோம்

         ஆனாலும் வீறுகொண்டு எழும் அவன்  அவயத்தின் சுதந்திரம் நம்மை அலைகழிக்கிறது. நம்மைக் காக்கும் கோட்டைகள்  என நாம் நினைத்தவை சிறைகளென நமக்குத் தோன்றுகின்றன. அணிகலன்கள் என நாம் கண்டவை  விலங்குகள் எனத் தோன்றத் தொடங்குகின்றன. நம் மனம் அவன்மீது கொண்ட அனைத்து  அச்சங்களையும் அருவருப்புகளையும் தாண்டி அவன்மேல் ஈர்ப்புகொள்ள ஆரம்பிக்கிறதுநம்மை காக்கும் நெறிகள் வலுவிழந்து  தரையில் துவண்டு விழுகின்றன.

   நம் அச்சமெல்லாம் மறைந்து அவனின் ஈர்ப்பில் முழுதுமாக  வீழ்ந்து  அரண்களை தாண்டி அணிகலன்களைத் துறந்து  வெற்று உடம்புடன் அவனைக் கூடி புணர்ந்து  ஒன்றென இருக்கையில் நாம் அறிவோம் அவனே நாமென.
சிவோஹம்.
தண்டபாணி துரைவேல்