Saturday, July 2, 2016

எல்லாம் ஆடல் தானா?



அன்புள்ள ஜெ

நம்மை ஆண்ட  பிரித்தானிய மண் என்ன சொல்கிறது? உங்களுக்கு வெண்முரசு தரும்  உடல், மன அழுத்தம் எத்தைகையது என அறிவேன்,  அது குறித்து நம் நண்பர்கள் எப்பொழுதும் கவலைப்படுவதுண்டு.... வியாசனையும், கம்பனையும் காத்த அன்னை சரஸ்வதி உங்களுடன் என்றும் இருப்பாள்..

பன்னிரு படைக்களத்தின் உச்ச பகுதி அற்புதம்.. ஒவ்வொரு பெண்ணின் அகத்தில் இருந்து கிருஷ்ணன் எழும் கணம் ஏற்பட்ட மாபெரும் உள எழுச்சியும், விழி நீரும்.. வாழ்க்கையையும் மிஞ்சி நிற்கும் நிகர் வாழ்க்கை...

மனதில் சில மாதங்களாகவே ஓடும் கேள்வி இது.. கிருஷ்ணனின், திரோபதியின் வார்த்தைகளில் மீண்டும் மீண்டும் வரும் சொல் " இவை அனைத்தும் ஒரு மகத்தான ஆடல்" என்பது.. பகவத் கீதையின் முக்கியமான சாரமும் இதுதான்.. வரலாற்றின் நாயகர்களுக்கு, அவதாரங்களுக்கு, அவர்களை சரணடைபவர்களுக்கு அதில் இடம் இருக்கிறது.. ஆனால் சாதாரண, எளிய மக்களுக்கு இந்த கோட்பாட்டில் இருக்கும் இடம் என்ன?? அழிவதும், சாவதும் தவிர...

இந்திய வரலாறையே எடுத்து கொள்வோம்.. ஆயிரம் ஆண்டுகளாக ( 7 மறுபிறப்புகளுக்கும் அதிகமான காலம் ) மலம் அள்ளி வாழும்  மக்கள் இருக்கிறார்களே??  "எல்லாமே ஆடல் "  எனும் கோட்பாடை   வைத்து இதை நியாயப்படுத்தி விட முடியுமே?? ஆயிரமாயிரம் ஆண்டுகள் அப்படி அழிவதுதான் "ஆடலில்" அவர்களின் இடம் என்று சொல்ல முடியுமா?? 

மனித கற்பனையையும், ஞானத்தையும் விட கோடி மடங்கு பெரிய இந்த பிரபஞ்சத்தையும், அதன் இயங்கியலையும், கோடி கோடி சாத்தியங்கள் உள்ள வாழ்க்கையின் எதிர்பாராமைகளையும்  புரிந்து  நம்மை சாந்தப்படுத்தி கொள்ளவும், தோல்வி, துன்பத்தில் இருந்து விடுபடவும் இந்த கோட்பாடு நிசசயம் உதவும்.. ஆனால் இது முழுமையானதா?? இதுகுறித்து உலகின் மற்ற ஞான தரிசனங்கள் சொல்வது என்ன? 

பிரசாத் 
சேலம் 


அன்புள்ள பிரசாத்

அது வெறும் சாக்கு- விளக்கம் அல்ல
இங்குள்ள வாழ்க்கை  அறத்துக்கும் ஆற்றலுக்குமான சமர்
அறம் ஆற்றல்கொள்வதே என்றும் கனவாக இருக்கிறது
ஜெ