Friday, July 1, 2016

உச்சம்



அன்பின் ஜெ எம்.,
இன்றைய பன்னிரு படைக்களத்தின் உச்சம் பாஞ்சாலியின் ஆடை மீட்பு.
இந்தப்பகுதி எப்படி வரப்போகிறது என்று ஆவலுடன் காத்திருந்தேன். கண்ணனும் வந்தார்...
ஆனால் உள்ளங்கை விரித்து ஆடை பரப்பும் கண்ணனாக அல்லாமல் அங்கிருந்த பெண்களின் உள்ளங்களில் வீற்றிருந்து அவர்களை இயக்கும் உந்து விசையாக.
இதன் முன் குறிப்பாகவே கிருஷ்ணை துரியன் சந்திப்பு நிகழ்ந்திருப்பது இப்போது புலனாகிறது. துரௌபதி வந்ததும் எல்லாத் தரப்புப்பெண்களும் இயல்பாக இணைந்து கொண்டது பற்றிச் சொன்னதும் இந்தக்கட்டம் நோக்கிய நகர்த்தல்களே...
அரசு சூழ்தலுக்கும்,அவை விதிகளுக்கும் ,அரச ஆணைக்கும் கட்டுப்பட்டு நின்ற நெட்டை மரங்களான மூத்தோர் போலன்றி, அந்த வரம்புகளை ஒரு நொடியில் தகர்த்தெறிந்து எந்த அக புற தளைகளோ கட்டுப்பாடுகளோஅற்ற சுதந்திரப் பெண்களாய்,எவர் ஆணைக்கும் அனுமதிக்கும் காத்து நிற்காமல் ,எந்தப்பின் விளைவுகளை எண்ணியும் அஞ்சித் தயங்கி விடாமல் தங்கள் ஆடைகளை உப்பரிகையிலிருந்து வீசி எறிந்து சக பெண்ணின் மானம் காக்க அவர்கள் ஒன்றாய் முன் வரும் அந்தக்கட்டம்...
ஒரு நொடி...மெய் சிலிர்த்து விதிர் விதிர்த்து  உறைந்து போனேன்.
இந்த அபூர்வக் கற்பனையை உங்களில் நிகழ்த்திய நாமகள் என்றென்றும் உங்கள் நாவில் வாழ்க என்று சொல்லிக் கரம் குவித்துக் கண்ணீர் மல்கி நிற்கிறேன்.
அன்புடன்
எம் ஏ சுசீலா