Thursday, March 10, 2016

ஸ்தூனகர்ணன்



அன்புடன் ஆசிரியருக்கு 

                                         இன்றைய  இறுதி  அத்தியாயத்தை படிக்கத்  தொடங்கும்  முன் அந்த  கதையையும்  அருகில் கிடந்த துரியோதனன்  கரத்தையும் கண்டதுமே ஸ்தூனகர்ணன்  நினைவெழுந்தது. நஞ்சேறிய வெய்யோன்  கருணை  வடிந்து  முழுமை  கொண்ட  துரியோதனன்.  அழிவினை விரும்பும்  ஒரு உவகை  உள்ளே  நிறைந்தது. தருமனும் கிருஷ்ணனும்  விழைவுகளால் உந்தப்படாதவர்களா?

இருளினை ஏற்கத்  தயாராகிவிட்டான். அவன்  அதை  மட்டுமே  ஏற்க  முடியுமா? நான் ஊகித்து  வைத்திருந்ததை விட  இந்த உடைவு மென்மையாக  நிகழ்ந்துவிட்டது. ஆனால்  விதை  போல்  அந்த  உடைவு  வளர்ந்து கொண்டே  இருக்கிறது.  கர்ணன்  இந்திரபிரஸ்தம்  செல்லாதிருந்திருந்தால் உரகர்களை சந்திக்காமல்  இருந்திருந்திருந்தால் ஜராசந்தன்  துரியோதனனுடன் தோள்  கோக்காதிருந்திருந்தால் அவர்கள்  ஒன்றாக  நகர்  நுழையாதிருந்திருந்தால் துரியோதனன்  பலராமரிடம் பேசியிருந்நால் திரௌபதியிடம் பேச  நினைக்காதிருந்தால் தர்மன் அங்கு இருந்திருந்தால் கர்ணன்  பழி ஏற்க  முடியாது  என விலகியிருந்தால் இப்படித்தான்  நேற்றுவரை  எண்ணம்  சென்றது.  ஆனால் இன்றைய அத்தியாயம் முழுவதுமாக மனதை மாற்றிவிட்டது.துரியோதனன்  தன்னுள்ளிருந்து தன்னை  மீட்டெடுத்துக்  கொண்டுவிட்டான் என அந்த  கதையே  உணர்த்திவிட்டது.  முழுக்க  முழுக்க  கர்ணனின்  பார்வையில்  வளர்த்தெடுக்கப்பட்ட  உலகம். பெருங்கருணையும் பெருங்காதலும்  பெருவஞ்சமாக உருவெடுத்துவிட்டது. அடுத்தது  துரியோதனன்  என்றே  நினைக்கிறேன்.

“முற்றிலும் நிகர்நிலை கொண்டவர். மூத்தவரே, எந்தையிடம் அடிவாங்கி இறப்பைத் தொட்டு மீள்வது வரை அவர் இவ்வாறுதான் இருந்தார். அணுகமுடியாதவராக. மெல்லுணர்வுகள் அற்றவராக…”
எதிர்பார்த்திருக்கிறேன்
அன்புடன்
சுரேஷ்