Saturday, April 30, 2016

மெய்மையின் அளவு




மனிதன் எத்தனை பெரியவன்? உடல் அளவுக்கு அல்ல ஆணவம் அளவுக்கு பெரியவன். தசரதம் ஓட்டிய தசரன். பத்துதலையுடைய ராவணன், நூறு கைகள் உடைய கார்த்தவீர அர்ஜுனன். இறைவனையே குள்ளனாக்கிய மகாபலி. பெத்துப்போடும் அன்னையிடமே பலநூறாக பிறந்துக்கொண்டே இருந்த இரத்தபீஜன். போய்க்கொண்டே இருக்கிறது மானிட ஆணவத்தின் பட்டியல். 

மெய்மை எத்தனை சிறியது ஒரு சொல் அளவுக்கு, அதையும்விட உள்ளத்தில் ஒரு சொல் விழி்க்கும் இடமளவுக்கு சிறியது.

உண்மையில் மனிதன் அத்தனை பெரியவனா? மெய்மை அத்தனை சிறியதா? கௌசிகன் காணும் கனவு மாற்றிப்போடுகிறது. இன்சோலையின் அக்கறையில் உள்ள வெள்ளைப்பசுவை காணும் கௌசிகன் அதனை அணுகும்தோறும் சிறித்து, அதன் கால்களுக்கு இடையில் சென்று நிற்கையில் கடுகென சிறித்துவிடுகிறான். பசுவை அண்ணாந்துப்பார்க்கிறான். அந்த பசு அவன் தலைக்குமேல் வெண்முகில் குவிலென காட்சியளிக்கிறது. கௌசிகன் காணும் பசு அக்கறையில் இருப்பதுதான் மனிதன் இக்கறையில் எவ்வளவு தூரத்தில் உள்ளான் என்பதன் அடையாளம். இங்கு இவன் உயரமும் அங்கு அதன் உயரமின்மையும் இடமாறு தோற்றப்பிழையாகிவிடுகின்றன. 
 
அந்த பசு மெய்மை அதன்கால்கள் வேதம் அதன்பால் மெய்மை அறிந்தவர் உண்ணும் அமுதம். வேதத்தின் முன்னும் மெய்மையின் முன்னும் மனிதன் ஒன்றுமே இல்லை. வெறும் புல். அந்த புல் பிரமனின் முன்பு பிரமஞானியாக முடியும்.

மனிதன் வாழ்க்கையில் தேடிச்சேர்க்கும் வாங்கிக்குவிக்கும் அனைத்தும் ஒருநாள் ஒன்றுமில்லை வெறும் குப்பை என்று அகம் உணரும். காரணம் மனிதன் ஆணவம் சினம் விழை என்று தேடிச்சென்ற இன்பம் மெய்மை ஒன்றுதான். அது அவனுக்கு தெரிந்தும் புரியாமல் இருக்கிறது. அன்று மனிதனை அது விரக்தியில் தள்ளுகிறது. 

//அடைந்தவையும் ஆள்பவையும் சிறுத்து பொருளற்றவையாக மாறின. ஒவ்வொன்றையும் கடும் சினத்துடனும் அருவருப்புடனும்தான் அவன் எதிர்கொண்டான். மனைவியர் அகன்றனர். மைந்தர் அஞ்சினர். செல்வம் குப்பையென்று தோன்றியது. நாடு வெறும் மண்ணென்றாகியது. முடியும் கோலும் கொடியும் அரியணையும் கேலிநாடகமாக தோன்றின//

செல்வம் மனைவி மக்கள் நாடு சுற்றம் என்று எத்தனையோ திரைகளுக்கு பின்னால் நிற்கும் மனிதன் விழையும் ஒன்று அவன் நினைவுக்கு வந்து நெஞ்சறியாத ஒன்று மெய்மையை அடைதல். அதை அடையவே மனிதன் பிறக்கிறான். அதை அடையாமல் வாழவே உலகம் அவனுக்கு பழக்கப்படுத்தப்படுகிறது. ஆனால் மெய்மை வேதக்கால்கொண்டு அமுதம் நிறைந்த காமதேனுவாய் கனவில் வந்துவிடுகிறது. கனவில் கண்டவர்கள் எல்லாம் அதை அடைந்துவிட முடியுமா? ஆணவமும் சினமும் விழைவும் கொண்ட மனிதனுக்கு அது எளிதல்ல. ஆனால் செய்யமுடியும் என்று கௌசிகன் காட்டுகின்றான்.

// நான் பின் திரும்புபவன் அல்ல. உறுதிகொண்டபின் வெல்வதோ இறப்பதோதான் என் வழிஎன்றான் கௌசிகன்.//

மெய்மையை அடைய இந்த வைராக்கியம் வேண்டும். சாகின்ற அளவுக்கு வைராக்கியம் வேண்டுமா? என்று நினைக்கும் மனிதன் செத்துப்போகின்றான் என்பதுதான் நடைமுறை வாழ்க்கை.

வைராக்கியம் உடையவன் சாவதே இல்லை.

கௌசிகன் தவத்தின் போது அவன் உடம்பில் இருந்து ஐந்து நச்சுநாகங்கள்  இறங்கி ஓடின என்ற இடம் அற்புதம். பஞ்சேந்திரங்கள் என்னும் நச்சுநாகங்கள் பிடியில் வாழும் மனிடன் அறிவதில்லை தனது விடத்தை. அதன் சுவையில் மயங்கி மயங்கி சாகின்றான். சாகநிலைபெற அந்த நச்சுநாகங்களை இறங்கிஓடவைக்கவேண்டும். அந்த நாகங்கள் ஓடியவின்பு கிரகணம் நீங்கிய பௌர்ணமிப்போல அவைகள் அமுத ஒளியல் ஒளிர்கின்றன.  உடலுக்குள் இருக்கம் மண் நீர் தீ காற்று ஆகாயம் பஞ்சபூதங்களும் அற்புதமாற்றம்பெற்று அவரையே வெண்பசுவாக்கி வான்பசுவின் அமுதுண்ண வைக்கிறது. ஜெ தனக்கே உரிய கற்பனையில் தவத்தை கவிதையாக்கி இருக்கிறார்.

//அவர் உடலுருகி மறைய தோல்போர்த்த என்புக்குவை அங்கிருந்தது. மூச்சு துடிக்கும் மட்கிய உடலுக்குள் தவம் மட்டுமே எரிந்து நின்றது. அவர் உடலில் இருந்து ஐந்து நச்சுநாகங்கள் இறங்கிச்சென்று மறைந்தன. கொதிக்கும் நீரூற்று ஒன்று ஒழுகி ஒழிந்தது. அனல் எழுந்து அவரை விறகாக்கி நின்றெரிந்து அணைந்தது. அக்கரிக்குவைக்குள் இருந்து நீள்மூச்சென ஒரு காற்று எழுந்தது. அதன்பின் அது கல்லெனக் குளிர்ந்து காலமின்மையில் அங்கிருந்தது. அவர் புகைமுகிலென்றானார். வெள்ளைப்பசுவின் உருக்கொண்டு விண்ணிலேறினார். அங்கிருந்த வெண்பசு ஒன்றன் அகிடின்கீழ் நின்று அமுதுகுடித்தார். மீண்டெழுந்த முனிவர் விஸ்வாமித்ரர் என்றழைக்கப்பட்டார். அவரது கொட்டிலில் அமுதகலத்துடன் காமதேனு நின்றது என்றனர் கவிஞர்//

கௌசிகனின் தாய் மோதவதி தனது மைந்தனை நீலச்சுனையில் மறையவிட்டு கண்ணீர்விட்டு தவிப்பதும் பின் அவன் ஹிரண்யன் ஆகி வந்ததை எண்ணிக்களிப்பதும் அற்புதம். மைந்தனை ஈன்று தவவாழ்விற்கு அற்பணிக்கும் அன்னையின் முழுவடிவம்.

//“ஏன் சுனையில் நின்றிருக்கிறாய்? மேலே வா!” என்றாள். “என் இடைக்குக்கீழ் நீ நோக்கலாகாதுஎன்று அவன் சொன்னான்//. நிர்வாணத்தையும் நிர்வாணத்தின் வல்லமையையும் அள்ளிவைக்கும் சொற்கள். அன்னையும் பெண்தான்.

//மாரன்வெற்றிகொள் பூமுடிக்குழார் வியப்புற நிடு மெய்த்தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரனே//

ராமராஜன் மாணிக்கவேல்.