Monday, August 24, 2020

காண்டீபம்

 

 

அன்புள்ள ஜெ

காண்டீபம் என்பது ஆண்மையின் அடையாளம். மீசைபோல. ஆகவேதான் காண்டீபம் நாவலே சுஜயனின் கண்வழியாகச் சொல்லப்படுகிறது. சின்னப்பையன்களின் கனவே ஆண்மையின் ஆற்றலை அடையவேண்டும் என்பதுதான். சிறுவர்களாக இருக்கையில் உருவாகும் அந்த ஆதிக்க ஆசைதான் பின்னர் ஆண்களை ஆட்டிப்படைக்கிறது. அவர்கள் வாழ்க்கை முழுக்க அதை சுமந்து அலைகிறார்கள். வேறு எதைவிட்டாலும் அதைவிடமுடியவில்லை.

காண்டீபம் நாவலில் வரும் காண்டீபம் முதல் கடைசியில் அர்ஜுனன் அதைக் கைவிடும் இடம்வரையிலான ஒரு மானசீக பயணம் ஒரு மகத்தான நாவலை கற்பனையில் எழுப்புகிறது. நாமெல்லாம் சுஜயனாக நின்றுதான் அர்ஜுனனை பார்த்துக்கொண்டிருந்தோம். இன்றைக்கும் அப்படித்தான். அந்த அர்ஜுனனின் சாவுதான் கடைசிநாவலில் நடைபெறுகிறது. அதன்பின்னர்தான் அவன் விடுபடுகிறான்.

அது இருக்கும் வரை அவனுக்கு எந்த ஞானம் கிடைத்தாலும் பயனில்லை. அவை அவனுடைய ஆணவத்துடன் சென்று கலந்துகொள்கின்றன. காண்டீபம் இழக்கும்போதுதான் அவன் உண்மையான யோகியாக ஆகிறான்.

 

கணேஷ்குமார்