Sunday, August 30, 2020

பாரதவர்ஷம்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை வந்ததில் வண்ணக்கடல் நாவல் எனக்கு மிகமிக முக்கியமானது. மொத்த பாரதவர்ஷமும் ஒருநாவலில் ஒரு கோட்டுச்சித்திரமாக வருகிறது.

இளநாகனின் பயணத்தை நானே மனதில் நிறுத்திப்பார்த்தேன். அவன் குமரிக்கு அப்பால் கடல்கொண்ட ஏழுபனைநாட்டிலிருந்து கிளம்புகிறான். மதுரை வருகிறான். பூம்புகார் வந்து அங்கிருந்து காஞ்சி. அங்கிருந்து காளஹஸ்தி. அங்கிருந்து நாகார்ஜுனசாகரில் மூழ்கிப்போன விஜயபுரி. அங்கிருந்து ராஜமகேந்திரபுரி அல்லது ராஜ்முந்திரி. அங்கிருந்து கடப்பா போய் சிலிக்கா ஏரிக்குள் இருந்த துறைமுகம் வழியாக புவனேஸ்வர். அங்கிருந்து அப்படியே வட இந்தியா போகிறான்.

இந்த ஒவ்வொரு ஊரின் நில அமைப்பும் கட்டிட அமைப்பும் மக்களின் வாழ்க்கையும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய நில அமைப்பைக்கொண்டு அன்றைய நில அமைப்பு சொல்லப்பட்டிருக்கிறது. கடப்பா கல் உள்ள பகுதியில் கடப்பாக்கல்லால் வீடு கட்டியிருக்கிறார்கள். சம்பல் நதியின் கரையில் கதை முடிகிறது. ஒரு பெரிய பார்வை. மலைமேல் ஏறிநின்று இந்தியாவை பார்த்த உணர்வு உருவாகிறது

ராஜ்மோகன்