Wednesday, August 12, 2020

அணிகள்


அன்புள்ள ஜெ

வெண்முரசில் ஒற்றைவரிகளை எழுத்துப் பாராட்டி எழுதுபவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஒருநண்பர் நவீன இலக்கியத்திலே அப்படி வரிகள் தனியகா வராது என்று சொன்னார். மார்கரட் அட்வுட் ஒரு பேட்டியில் அப்படி ஏதாவது வரி வருமென்றால் அதை வெட்டிவிடுவேன் என்று சொன்னதை அவர் குறிப்பிட்டார். அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம்

அப்போது ஒரு நண்பர் சொன்னார். அவர் ஆர்க்கிடெக்ட். இன்றைய வீடுகளில் சுவர்களில் அல்லது தூண்களில் அலங்காரங்கள் இல்லை. ஒவியங்களோ சிற்பங்களோ இல்லை. கியூபிஸ்ட் அழகுதான் அவை உத்தேசிப்பது. ஏனென்றால் இது மாடர்ன். ஆனால் கிளாஸிக் கட்டிடங்களில் அலங்காரங்கள் சிலைகள் ஓவியங்கள் இருக்கும். வைரம் போன்ற மணிகளும் பதிக்கப்பட்டிருக்கும். இன்றைக்குள்ள நகைகளிலும் கற்கள் இல்லை. பழைய நகைகளில் கற்கள் உண்டு.

காவியத்தின் அழகியல் அது. காவியத்தன்மைகொண்ட நாவல்களிலும் அந்த அம்சம் உண்டு. டஸ்டயேவ்ஸ்கி நாவல்களின் வரிகளும் கசன்ட் சாக்கீஸ் நாவல்களின் வரிகளும் இன்றும் பேசப்படுகின்றன என்றார். அது ஒரு நல்ல விளக்கம் என்று தோன்றியது

மகாதேவன்