Friday, August 14, 2020

மனிதநாடகம்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசின் நாவல்களை தொடர்ந்து வாசிக்கிறேன். உண்மையில் நீங்கள் அதை எழுதி முடித்த அன்று, ஜூலை 16 ஆம் தேதி ஆரம்பித்தேன். நீலத்தை சாய்சில் விட்டுவிட்டு இப்போதுதான் பிரயாகையை தொடங்கியிருக்கிறேன். நான் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகளாகின்றன. இதைப்போல வெறிகொண்டு வாசித்த ஒரு நாவல் இல்லை. போகிறபோக்கில் வரும் செப்டெம்பருக்குள் முடித்துவிடுவேன் என நினைக்கிறேன். ஒருநாள் 6 மணிநேரம் வீதம் வாசிக்கிறேன்.

மழைப்பாடல் வரும்வரை இந்நாவலின் அமைப்பைப் பற்றிய புரிதல் இல்லை. அதுவரை நவால் ஒரு நிலத்தில் நடக்கவில்லை. மழைப்பாடல் ஆழமான அஸ்திவாரம். இப்போது இனி என்ன என்ற வெறி என்னைக் கொண்டுசெல்கிறது. களம் அமைந்துவிட்டது. ஒரு மிகப்பெரிய மனிதநாடகம். இத்தனை ஆண்டுகள் இந்த உலகில் நடந்ததிலேயே மிகப்பெரிய மனிதநாடகம் இல்லையா இது!

கிருஷ்ணமூர்த்தி ஆனந்த்