Wednesday, August 19, 2020

வகுத்துரைத்தல்

 

அன்புள்ள ஜெ

ஒரு வாசகர் வெண்முரசில் ஆழ்மனம் நேரடியாக வெளிப்படும் கனவுபோன்ற இடங்களைப் பற்றி எழுதியிருந்தார்.அப்படி மேலும் பல இடங்கள் உள்ளன. அவற்றை ஒருவர் அட்டவனையிட்டாலே முக்கியமான ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்

அதோடு இன்னொரு அட்டவணையும் முக்கியம். ஒரு சிந்தனைமரபு அல்லது கொள்கையை சுருக்கமாக, ஒரே அத்தியாயத்திலே சொல்லியிருக்கும் பகுதிகள். வண்ணக்கடலில் அப்படி ஒரே அத்தியாயத்தில் சாங்கியம், வைசேஷிகம்,யோகம் நியாயம் சமணம் ஆகியவை சொல்லப்படும் இடங்கள் உண்டு. பிரயாகையில் துரோணர் அஸ்திர சாஸ்திரத்தின் சாராம்சத்தைச் சுருக்கமகாச் சொல்கிறார். அதேபோல மருத்துவம் சமையல் எல்லாம் வகுத்துரைக்கப்படும் இடங்கள் உண்டு நீர்ச்சுடர் நாவலில் ஒரே அத்தியாயத்தில் சாங்கிய தரிசனம் அற்புதமாகாச் சொல்லப்பட்டுள்ளது.அவற்றை மட்டும் தேர்வுசெய்து ஒரு தனி நூலாக வெளியிடலாம் என்று எனக்கு தோன்றியதுண்டு

அருண்குமார்