Saturday, August 15, 2020

ராமாயணம் அடுத்து?

 

அன்புள்ள ஆசிரியருக்கு 

நான் உங்கள் வாசகன் ... வெண்முரசை தொடர்ந்து வாசித்து வந்தேன் .. அது இல்லாத காலை வெறுமையாக இருக்கிறது ... சொல்வளர்காடு போன்ற ஒன்றை எழுத இன்னொருவரால் முடியாது ...தாங்கள் இராமாயணத்தையும் எழுத வேண்டும் என்பது என் போன்றோரின் தாழ்மையான கருத்து ... பரிசீலியுங்கள்  

 

அன்புடன் 

அமர்நாத்

திருச்சி ..

 அன்புள்ள அமர்நாத் 

உங்களைப் போலவே சிலர் எழுதியிருந்தனர். ஏன் ராமாயணத்தை எழுதமுடியாது என்பதற்கு மூன்று காரணங்கள் 

 அ.ஏழாண்டுகள் புழங்கிய மொழிநடையிலேயே மேலும் சில ஆண்டுகள் எழுதுவதென்பது சலிப்பூட்டுவது. மேலும் மகாபாரதத்தை மீண்டும் எழுதும்போது அந்த நிலப்பரப்பு, சமூகவியலை உருவாக்கும் சவால் இருந்தது. அதையே மீண்டும் எழுதுவதும் ஊக்கமூட்டும் செயல் அல்ல

 ஆ.ராமாயணம் மகாபாரதம்போல விரித்து எழுதுவதற்கான வாய்ப்புகள் உள்ளது அல்ல. அதில் அரசியல் மிகக்குறைவு. கதாபாத்திரங்களின் ஊடுபாவுகள் அதைவிட குறைவு. காமகுரோதமோகங்களின் தருணங்கள் அதைவிடவும் குறைவு. அதோடு ஒற்றைநாயகனைக் கொண்ட கதை அது. ஆகவேநவீனப் புனைகதைக்கு உரியது அல்ல

 இ.கம்பராமாயணம் ராமாயணத்தை விரித்து எழுதிவிட்டது. மகாபாரதம் தமிழுக்கு விதைக்களஞ்சியம், முளைக்கவைக்கலாம். கம்பன் எல்லா விதைகளையும் முளைக்கவைத்துவிட்டான்

 ஜெ