Monday, August 31, 2020

வெண்முரசின் பாரதம்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசில் இந்தியா காட்டப்பட்டிருப்பதைப் பற்றிய கடிதங்களைக் கண்டேன். நானும் அதைப்பற்றி நினைப்பதுண்டு. வெண்முரசை வாசித்ததுமே எனக்கு இந்தியாவின் நிலம் பற்றிய சித்திரம் மாறிவிட்டது அதுவரை இன்றைக்குள்ள நிலம் மட்டுமே என் பார்வையிலிருந்தது. நான் அடிக்கடி பயணம் செய்பவன். இன்று உஜ்ஜயினி எப்படி இருக்கிறது காசி எப்படி இருக்கிறது என்றுதான் எனக்கு தெரியும்.வெண்முரசு வாசித்ததுமே அந்தந்த இடங்களில் மிகப்பழைமையான நகரங்கள் வந்து கண்ணிலே பதிந்துவிட்டன. இனி அதை மாற்றமுடியாது. இன்றைக்கு நான் பார்க்கும் இந்தியாவின் நிலமே வேறு

ஆனால் என்ன ஆச்சரியமென்றால் அந்த பழைய நிலம் அங்கேயே இருக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் சென்றால் அங்கே அந்தப்பழைய நிலத்தை நம்மால் கண்டடையமுடியும்.அந்த பழைய ஆற்றங்கரைகளும் கோயில்களும் அங்கேயே இருக்கின்றன. இன்றைய இந்தியாவுக்கு அடியில் அந்த இந்தியா இருக்கிறது. ஓவியம் மீது வெள்ளையடித்ததுமாதிரித்தான் இன்றைய இந்தியா. வெண்முரசின் மிகப்பெரிய பங்களிப்பென்பது அந்த இந்தியாவை வாசகனுக்கு கனவுமாதிரி உருவாக்கி அளித்ததுதான் என நினைக்கிறேன்.

ராஜசேகர்