Monday, July 2, 2018

திருதிராஷ்டிரரை நினைக்கையில்




வணக்கம்!.

திருதிராஷ்டிரரை நினைக்கையில் மனதில் ஏற்படும் பச்சோதாபத்தை புறந்தள்ள இயலவில்லை.

அஸ்தினபுரியின் அவையில் வீற்றிருக்கும் பால்ஹீகப் பிதாமகரின் பாதங்களில் 
 கைகளால் அலைந்து அந்தப்பேருருவை மனக்கண்ணில் கண்டுகொள்கிறார்.

நெடுநாள் கழித்து நகர் நுழையும் துச்சளையை மார்போடணைத்து உடலெங்கும் வருடி நிலைக்கொண்டபின் போர்தடுக்கும் வழியை கண்டடைந்த மகிழ்ச்சியில் பிதற்றுவார். இப்போதும் அவ்வாறே நம்பிக்கை வைத்து அவையில் சொல்லுரைத்தாலும், அது எக்கணம் முடியும் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கிறது.

முடிதுறப்பதற்க்கான சடங்குகள் செய்யப்பட்டு பதினெட்டாம் நாள் அரியணை அமர காத்திருக்காமல் குறிப்புணர்வு சடங்கொன்றை நடத்துமாறு சகுனியின் குரலெழுந்ததும் அனைத்தையும் உய்த்துணர்ந்திருப்பார்...

எவ்வகையிலும் துரியனின் தலையிலிருந்து மணிமுடி இறங்கப்போவதில்லை என்ற பூரிசிரவஸின் எண்ணவோட்டம் சபையின் கடைக்கோடி வரிசை வரை பரவியிருப்பது திருதிராஷ்டிரருக்கும் புரியாமலில்லை.


//
"எந்தையின் ஆணையை அவையில் நான் மேற்கொண்டேன் என்று அனைவரும் உணர்ந்தால் போதும்” 
//
மணிமுடி துறக்க தயாராகி நிற்க்கும் துரியன் சொல்லும் வார்த்தைகள்.

"இப்போரிணை நிறுத்த என்னாலான அனைத்து முயற்சிகளையும் நான் செய்து களைத்துவிட்டேன் என்று அனைவரும் உணர்ந்தால் போதும்" 

என்று பேரரசர் தனக்குத்தானே ஆசுவாசப்படுத்திக்கொள்வதொன்றே அவர்முன் இருக்கும் அவர் கட்டுக்குள் இருக்கும் வாய்ப்பு.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.