Tuesday, August 4, 2020

கங்கையின் ஊற்று



அன்புள்ள ஜெ

கீழே பாருங்கள். நாட்கள் எவ்வளவு விரைவாக ஒடிவிட்டன!!!

முதலில் வாழ்த்துக்கள்.

 உங்கள் ஆக்கங்களை வாசிக்கும் போதெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பேன். 

இது சாமான்ய சாதனை இல்லை. கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே ஆகக் கூடியது. அருள் இருந்துள்ளது. சாதனை கூடிற்று. 

க்ருஷ்ணனை கொண்டாடிவிட்டீர்கள். இருக்கட்டும் ஒரு புறம்.

பக்தியோடு படிப்பவர்கள் ஒரு பக்கம்.

இலக்கிய சுவைக்காக படிப்பவர்கள் ஒரு பக்கம்.

தத்துவத்தை உங்கள் ஆக்கத்தில் நோக்குவது ஒரு பக்கம்.

உங்கள் எழுத்து நம் வாழ்க்கையில் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு பக்கம்.இதில் நான் கடைசி வகை.எல்லோராலும் எழுத முடியாது. ஆனால் பலரால் படிக்க முடியும் விருப்பமிருந்தால்.

நம் ரிஷிகளெல்லாம் சிந்தனையின் ஊற்றுக்கள்.( உபநிடந்தகளை கேட்டு வருகிறேன் இப்போது)கங்கையின் ஊற்று போல் வற்றாமல் ஊறிக் கொண்டே இருக்கின்றது.
அந்த அருள் உங்களுக்கும் இருக்கின்றது இறை அருளால்.

இறை அருள் - உங்களின் சிந்தனைகளாகவும், இல்லறத்தின் மூலமாகவும், நண்பர்கள் குழுக்களோடும், நல்ல உடல் மன நலத்தோடும் சாத்திய பட்டிருக்கின்றது. இதுவே இறை அருள்.

ரிஷிகளின் அறிவு எப்படி மனித மேம்பாட்டிற்காக சொல்லப்பட்டதோ அப்படி உங்கள் எழுத்துக்களும் அப்படி பல இடங்களில் இருந்ததை உணர்ந்தேன்.

எதை என்று குறிப்பிட?

என் மனதினுள் பல அனுபவங்களை ஊறி ஊறி சுவைத்துக் கொண்டும் என் வாழ்வில் அந்த செயல்களை செயல் படுத்திக் கொண்டும் என்னை மென்மேலும் உயர்த்திக் கொள்ளவும் முயன்று வருகிறேன்.

வாழ்க்கையில் தத்துவங்களை செயல் படுத்தக் கூடும். அது முடியும். முயன்று கொண்டிருக்கிறேன்.

ஒரு பெண்ணாக பல இடங்களில் அவளின் சக்தியை எழுதிய போது என் சக்தியை உணர்ந்தேன்.

பல பெண்களை சொல்லலாம். த்ரொபதியை தவிரவும்...

ஒரு பெண் எப்படி இருக்க கூடாது என்றும் அறிந்தேன்..

அடக்கத்தையும் உணர்ந்தேன்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..

பால் இன வேறுபாடின்றி மனிதர்களின் குண, பண்புகள், திறன் பற்றி அலசி தள்ளிவிட்டீர்கள்.

மொத்தத்தில் என்னைப் போல் பலர் நல்ல அனுபவங்களை அடைந்திருப்பார்கள்.

அடுத்தது என்ன?

அன்பும் வாழ்த்துகளும்

மாலா

இதுவே உங்கள் எழுத்துக்களின் தாக்கம் என்னிடம்.

என்னால் முழுதுமாக என் எண்ணஙகளை எழுத முடியவில்லை என்பதே உண்மை.