Wednesday, June 12, 2019

எரி



அன்புள்ள ஜெ

இன்றைய அத்யாயம் இருட்கனி 63ல் குருக்ஷேத்ரமே மாபெரும் வேள்விக்குளமாக வேதநாதத்துடன் எழுந்துள்ளது.

இதுவரை மனிதர்களை வீரர்களாக, படைத்தலைவர்களாக, அரசர்களாக கட்டி நிறுத்தியவையனைத்தும் அக்னியில் கரைந்தழிகிறது.

ஒவ்வொருவரும் தங்களுள் நிறைத்திருந்தவைகளை ஆகுதியாக்கும் வாய்ப்புடன் மாசற விண்புகுகின்றனர்‌.

அதர்வத்தால் நோன்பு முடிக்கப்பெற்று அவியெனவே மாறி, மூதாதையர் முன்னின்று வேள்வியால் வின்னேற்றம் பெற்றேன் என்று தருக்கும் நல்லூழுடன் அமைந்துள்ளது அந்த வாய்ப்பு.

களவேள்வியில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் அவி பெற்றுச்செல்ல அமிர்தன்  அழைப்பு விடுக்கிறான் போலும் இறந்தார் போதவில்லை என இருப்போரும் அவியாகுகின்றனர்.

இதுவே தொல்வேதம் முழங்கும் இறுதிவேள்வியென நினைத்து மானுடரில் தேவர்கள் எழுந்து அதர்வத்திற்கு அவியாக விழைந்தார்களோ என்றும் எண்ணமும் உருவாகுகிறது.

தளைகள் அனைத்தும் உருகி ஒன்றனவாகும் பெருநிலையே குருக்ஷேத்திர வேள்வியின் பயனாக, எழும் வேதத்தின் அமரத்தில் அமர்ந்துள்ளது போலும்.

தங்கராஜ்