Thursday, June 7, 2018

கதை



அன்புள்ள ஜெ

வெண்முரசு ஒவ்வொரு அத்தியாயத்திலும் மெல்லிய திருப்பத்துடன் சுவாரசியமாகச் செல்கிறது. என்னதான் நுட்பங்கள் அழகுகள் எல்லாம் இருந்தாலும் கதையோட்டம் என்பது முக்கியமானது என்ற எண்ணம் இதை வாசிக்கும்போதுதான் ஏற்பட்டது. ஏனென்றால் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. அதில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்று ந்டைபெற்றுக்கொண்டிருக்கிறது. எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருப்பங்கள் உண்டாகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொள்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கையை நிறுத்திப்பார்த்தால்தானே நுட்பங்கள் எல்லாம் தெரிகின்றன. நிறுத்திப்பார்க்க ஏது இடம்?

வெண்முரசில் யுதிஷ்டிரரின் சபதம் வாசித்ததும் நாவல் உச்சம் அடைந்துவிட்டது, போர் வந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் திரௌபதி சொன்னது எல்லாவற்றையும் பின்னால் இழுத்துவிட்டது. இனி என்ன செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது மாயையைக் கொண்டுவர கிருஷ்ணன் சொல்கிறார். சாத்யகியைப்போலவே அடுத்து என்ன என்றே மனம் ஓடிக்கொண்டிருந்தது.

கிருஷ்ணராஜ்