Thursday, August 20, 2020

காமம் பேசுதல்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசில் மிகமிக முக்கியமான பகுதி என்பது பிரயாகையில் நீராட்டறையில் மாருதர் என்னும் நீராட்டறைச் சேவகர் அர்ஜுனனிடம் பேசுவது. அவர் கொஞ்சம் கசப்பும் நையாண்டியுமாகப் பேசினாலும் எல்லா வரிகளுமே வந்து அறைகின்றன

இப்புவியில் பெருங்காமுகர்கள் இருவகை. புணர்ந்தபின் வெறுப்பவர்கள், வெறுத்தபின் புணர்பவர்கள்

பெண்ணுக்குத்தான் காமம் உடல் சார்ந்தது. ஆணுக்கு அது அகங்காரம் சார்ந்தது மட்டுமே. அந்தச் சிறிய சதையை எழுந்து திமிர்கொண்டு நிற்கச்செய்ய போதிய அகங்காரம் தேவை

என் காமத்தையே சின்னஞ்சிறியதாக ஆக்குமளவுக்கு நான் மானுடக்காமத்தை அறிந்திருக்கிறேன்.

நம் காதலிக்கு நாம் அளிக்கும் பரிசு நம் காதலின் மதிப்பு கொண்டது. பரத்தைக்கு நாம் அளிக்கும் பரிசு அவளுடைய உடலின் மதிப்புள்ளது.

காமுகர்களுக்கு அவள் உடலை நிர்வாணமாக்கினால் போதாது. உள்ளத்தையும் நிர்வாணமாக்க வேண்டும். ஆன்மா கையில் கிடைக்கவேண்டும்

வெறும்பெண்ணுடலை நாடி பெண்களிடம் செல்பவர்களுக்கு அப்பெண்ணுடலும் பொருட்டல்ல. அவர்கள் தங்களைத்தாங்களே புணர்ந்துகொள்கிறார்கள்.தன் கட்டைவிரலை சுவைத்துண்ணும் குழந்தைகள்

ஒவ்வொரு வரியிலும் மிகமிகக்கூரிய அவதானிப்புகள் உள்ளன. இந்த ஒரு அத்தியாயத்தை தனியாக எடுத்து பலமுறை வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன். தமிழில் காமத்தின் செயல்பாடு பற்றி இத்தனை ஆழமாக எழுதப்பட்ட ஒரு பகுதியே இல்லை

ரா.கிருஷ்ணன்