Tuesday, June 23, 2015

வெண்முரசின் கிருஷ்ணன் - ரகுராமன்


“உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ”…

கிருஷ்ணரை  பற்றி பேசும் பொழுது இதில் இருந்து ஆரம்பிப்பது தான் உசிதமாக இருக்கும் என நினைக்கிறேன்.  உலகின் ஒவ்வொரு நாகரீகத்திற்கும், பராம்பரியதிற்கும், அதை முழுவதுமாக பிரதிபலிக்கக்கூடிய ஒருவர் தோன்றி இருப்பார். அந்த மாதிரியான மனிதர்களின் ஆளுமை அவருடய சக காலத்தில் மட்டும் இன்றி,   அதில் பிறக்க போகும் ஒவ்வொரு உயிரின் ஆழ் மனதில் பதிந்து இருக்கும். அது ஒரு கூட்டு நனவிலியாக அந்த சமூகத்தின் பிரதிஞ்சையில்  பரவி இருக்கும். நமது இந்தியா நாகரீகத்திற்கும், பராம்பரியதிற்கும் கிருஷ்ணர் அம்மாதிரியான ஒரு ஆளுமை என்பதை நாம் எள்ளளவும் மறுக்க முடியாது.

ஆன்மிகரீதியாக, ஞான மார்கதிற்கும் பக்தி மார்கதிற்கும் ஒரு மிக பெரிய இணைவு இவர் மூலம் எற்ப்பட்டது. சமூக ரீதியாக மாடுகளையும், கன்றுகளையும், மேய்த்து கொண்டு காற்றில் சுற்றி திரிந்த ஒரு யாதவ சமுதாயத்தை ஒன்று இணைத்து, மேல் தட்டு மக்களே ஆண்டு கொண்டு இருந்த ராஜ்யதை கைபற்றி, ஒரு மாபெரும் நகரத்தை உருவாக்கிய ஒரு புரட்சியாளனாகவே அவர் தென்படுகிறார்.
வியாசரின் பாரதத்தில் கிருஷ்னர் ஒரு சாதாரண அரசியல் ஞானியாக தான் முன் வைக்க படுகிறார். பிறகு இந்திய நிலத்தில் தோன்றிய பக்தி இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் மெல்ல மெல்ல வளர்த்தி விரிவாக்கி அவரை இந்திய நாகரீகத்தின் பெரும்பான்மையான கூற்றுகளின்  பிரதிபலிப்பாக உருவாக்கி கொண்டது. இன்று கிருஷ்ணரை பிரித்து இந்திய பாரம்பரியத்தையும் , நாகரீகத்தையும் விளக்குவது மிகவும் கடினம். அதே போல் கிருஷ்ணரையும் , மற்ற நாகரீகத்தின் முன்னோடிகளுடன் ஓரளவுக்கு மேல்  ஒப்பிட முடியாது, ஏன் என்றால் கிருஷ்ணரை போல் ஒரு பெரிய ஆளுமை விரிவு, மற்ற நாகரீகத்தில் உள்ள முன்னோடிகளுக்கு  இல்லை.

என் நண்பர் ஒருவர் சொல்லுவார், உங்களக்கு தெரிந்த ஒரு இருபது பெயரை பட்டியல் போட்டால் அதில், கண்டிப்பாக இரண்டு பெயர் கிருஷ்ணர் சம்பந்தமாக இருக்கும் என்று. “Indology” என்ற இந்தியா கலாச்சார, நாகரீக ஆய்வு படிப்பின் துரிதமான வளர்ச்சிக்கு  “கிருஷ்ண தத்துவத்தின்” ஈர்ப்பு ஒரு முக்கிய காரணம் என்றும், “வஷிஸ்டாத்வைதம் “ என்பதே ஒரு வகையான “கிருஷ்ண தத்துவத்தின்”நீட்சிதான் என்றும் கூறுவார். கிருஷ்ணன் என்ற ஒரு யாதவ குல தலைவனை ,எப்பிடி ஒரு சமூகம், அதன் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப விரித்து கொண்டே விரிவாக்கி கொண்டே செல்கிறது என்பதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாகத்தான்  இருக்கிறது . பாகவத, புஷ்டி மார்க பக்தி இயக்கத்தில் இருந்து, ராமானுஜரின்  சீர்திருத்த இயக்கங்களாகவும், இன்று இருக்கும் ஹரே கிருஷ்ணர் ஹரே ராமா இயக்கம் வரைக்கும், இது விரிந்து கொண்டே இருக்கிறது

என் மகளை கிருஷ்ணர் கதைகள் சொல்லி தூங்க வைப்பது என் வழக்கம். அப்பொழுது  சாதாரணமான ஒரு கேள்வியை கேட்டாள், “அப்பா, கிருஷ்ணர்னா  யாரு”..  நானும் யோசிக்க ஆரம்பித்தேன்..
அவர் ஒரு தத்துவ ஞானியா? சிறந்த போர் வீரனா? ஒரு திறம்பட்ட நிர்வாக ஆளுமையா?அரசியல் சூழ்ச்சியாளானா? ஒரு தேர்ந்த அரசனா? ஒரு கலைஞனா? இரக்கம் இல்லாத கொலைக்காரனா? ஒரு யாதவ புரட்சி வீரனா?நல்ல காதலனா? ஒரு அழகான குழந்தையா?  பெண்களை பற்றி முற்றிலுமாக அறிந்து அவர்களை பித்துகொள்ள செய்யும்  மன்மதனா?அல்லது அவர் அந்த பிரம்மத்தின் இறை வடிவம் தானா? .

 ஜெ சொல்லுவதை போல நமது மரபு சொல்லி சொல்லி, விளக்கி விளக்கி  இன்னும் சொல்ல முடியாத, விளக்க முடியாத  ஒரு மிக பெரிய “Enigma” ஒன்று உண்டு என்றால் அது கிருஷ்ணர் தான்.. அவரை வைத்து பல கோயில்களை கட்டி கொண்டே செல்லலாம் அல்லது அவரை வைத்து பல தத்துவங்களை உருவாக்கி கொண்டே இருக்கலாம். புல்லாங்குழல், மயில் பீலி, இதுவெல்லாம் இந்திய மக்களின் ஆழ் மனதில் ஒரு அழிக்க முடியா படிமங்களாக நிலை பெற்று இருக்கிறது.

பிகே பாலகிருஷ்ணரில் தொடங்கி எஸ்ரா வரையிலான அனைத்து மறுஆக்க படைப்புகளும், இன்றைய நிலையில்தான் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்து இருக்கின்றன ,வெண்முரசு மட்டும் தான் மரபு ரீதியாகவே மகாபாரதத்தை விளக்கி அதை நவீன இலக்கியமாக எடுத்து செல்கிறது.  மரபில் இருக்கும் அனைத்து பூரானங்களை விளக்கி அதை ஒவ்வொரு கதா பாத்திரத்தின் குணாதிசையங்களின் அடிப்படையாக கொண்டு செல்வது என்பது ஒரு பெரிய முயற்சி, ஒரு பெரிய ஆய்வாக பல பேர் செய்ய வேண்டியதை தனி ஒருவராக ஜெ செய்து கொண்டு இருக்கிறார்.

வெண்முரசை படிக்க ஆரம்பிக்கும் பொழுதே, ஜெ கிருஷ்ணரை எப்பிடி கையாள போகிறார் என்பதை படிக்க ஆவலாகவே இருந்தேன். மகாபாரத கதையின் அடி நாளமே அந்த கிருஷ்ணர் கதாபத்திரத்தின் ஒரு வகையான மாய பிம்பம் தான்.. நவீன இலக்கியவாதியாக அதை ஒரு சாதராணமான கதாபாத்திரமாக கையாண்டு இருந்தால், இந்த இதிகாசத்தின் சாரமே வறண்டு போயி இருக்கும், மாறாக இது வரை வந்த வெண்முரசில் ஜெ கிருஷ்ணரை மிக மிக அழகாக கையாண்டு இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

“கிருஷ்ணர்” என்ற அந்த மாபெரும் பிம்பத்தை ஜெ வெண்முரசில் எப்பிடி கையாண்டு இருக்கிறார் என்பதை சிறு  குறிப்பாக  கீழே  பார்போம்:

நீலம் – ஒரு மரபு பார்வை:

இன்றைய சாமானிய  இந்திய மக்களின், கிருஷ்ணர் எனும் பிம்பத்தின் மரபு சார்ந்த பார்வையை தான் நீலத்தில், ஜெ பதிவு செய்கிறார்.   மரபை மறு ஆக்கம் செய்யும், மரபை  இன்றைய காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற முனையும்  அனைத்து எழுத்தார்களும், முதலில், மரபு என்ன சொல்கிறது என்பதை தீர்க்கமாக விளக்க வேண்டும். சாமானிய மக்களை விட அறிவு தளத்தில் மேம்பட்டவனாக, பகுத்தறிவு பார்வை உள்ளவனாக கருதும்  ஒருவன் கூட மரபில் என்ன சொல்லபட்டு உள்ளது என அறிய வேண்டும்.  நீலம் அதற்கான ஒரு முயற்சிதான். நீலம் முழுக்க பாகவத மற்றும் ஜெயதேவரின் அஷ்டபதியின் ஒரு நீட்சி தான் என்றாலும், அதன் எழுத்து நடையும், வடிவ அமைப்பும் தமிழ் இலக்கிய உலகிற்கு முற்றிலும் புதியவை.

நீலம்  இரண்டு வகையாக கிருஷ்ணரை பார்க்கிறது. ஒன்று ராதையின் வழியாக மற்றொன்று கம்ஸனின் வழியாக. ஒவ்வொன்ருக்கும் ஒவ்வொரு வண்ணம். ஒரு மனிதனின் மனதிற்கு மிக அணுக்கமாக இருப்பவர்கள் காதலியும் எதிரியும் தான். இன்னும் சொல்ல போனால் காதலியை விட நம்மை அனுக்கமாக கவனிப்பவர்கள் நம் எதிரிகள் தான். பல சமயம் ராதையை விட கம்ஸன் தான் கிருஷ்ணரை அதிகமாக காதலிக்கிறானோ எனவும் தோன்றும். ஒரு பெரிய கல்லை எப்பிடி உடைப்பார்கள் என்றால் நெருப்பு மூலம் அதை எரித்து கொண்டே குளிர்ந்த தண்ணீரைஅதன் மேல் ஊற்றுவார்கள், பிறகு அந்த கல்லை நம் விருப்பம் போல உருவாக்க முடியும். கிட்டதட்ட நீலம் செய்வதும் இது தான். ராதையின் காதல் நீலம். கம்ஸைனின் வன்மம் சிவப்பு. நம் இதயம் என்ற இரும்பு பாறையில் கம்ஸனின் சிவப்பு வன்மத்தை எரித்து எரித்து அதில் ராதையின் குளிர்ந்த நீல நீரை விட்டால் நம் இதயமும் சுக்கு நூறாகி சிதறும்.

அதே போல், நீலம் கம்ஸனை ஒரு கெட்ட கதாபாத்திரம் ஆகவே சித்தரிக்கவில்லை. ஒரு முரண்படும் பொருளாகதான் விவரிக்கபட்டு இருக்கிறான். நம் மரபில் அனைத்து முரண் பாடுகளையும் ஒன்றாகதான் இணைத்து கொள்கிறார்கள். உதாரணமாக அமுதின் சகோதரியாக நஞ்சை காட்டுவது. மேற்கத்திய சிந்தனையில் தான் அனைத்தும் கருப்பு வெள்ளையாக சித்தரிக்கபடும் , நம் மரபில் அனைத்தும் “Zero To 360 Degree” யில் தான் சொல்ல படுகிறது. இதனால் தான் இந்தியா நாட்டின் பல வழிபாட்டு முறைகள் (வராக, நாக வழிபாடு) அவர்களுக்கு ஒரு சாத்தான் வழிபாடு ஆக தெரிகிறது.   நீலம் பற்றி விவாதிக்க  தனி கட்டுரையே  வேண்டும் என்பதால் அப்பிடியே விட்டு விட்டு மேலே செல்வோம்.

வேதாந்த பார்வை:

வெண்முரசில் ஜெ, கிருஷ்ணரை பற்றி நமது மரபில்  குறிப்பிடபட்ட மேலே  உள்ள அனைத்து நிலைகளையும் (அரசியல் ஞானி, போர் வீரன், புரட்சியாளன்...) ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக மிக விஸ்தாரமாக விரிவாக்கி கொண்டே வாசகனை ஒரு விதமான பரவச நிலைக்கே இட்டு செல்கிறார்.
பிரயாகையில்தான் மகாபாரத கிருஷ்ணனின் முதல்  வருகை.. ஏகலைவனால் துரத்தப்பட்ட யாதவர்கள் ஓடி கொண்டே இருக்கிறார்கள். உங்கள் கடைசி குழந்தையும் விட மாட்டோம் என சூழ் உரைத்து கொண்டே அவன் பின்னால் தொடர்கிறான். அப்பொழுதான் கிருஷ்ணர் அங்கு வருகை புரிகிறார். அப்பொழுதும் அவர் உடலே புன்னகையாய் மிளிர்கிறது. அவர் தான் இருக்கும் இடத்திற்கும், செய்யும் செயலக்கும் சம்பந்தமே இல்லாதவர் போல் தான் வர்ணிக்க படுகிறார். அதே போல்தான் அர்ஜுணனை கூட்டி கொண்டு மதுராவில் போர் புரியும் பொழுது ஒரு காதல் பாட்டை பாடி கொண்டே சண்டை போட்டு கொண்டு இருக்கிறார். அது கிருஷ்ணரின் வாழ்வா சாவா என தீர்மானிக்கும் போர். அப்பொழுதும் சிறு பதட்டமே இன்றி, மரத்தில் பழங்களை பறிப்பதை போல், மிக இலகுவாக காய்களை நகர்த்தி கொண்டே செல்கிறார். கீதையின் ‘செயலின் செயலின்மை’ தத்துவத்தை சொல்லாமலே சொல்லி உணர வைத்து விடுகிறார்.

வெண்முரசின் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் என்ன நினைக்கிறது என ஜெ, நீளமாக  விவரிப்பார் ஆனால் கிருஷ்ணர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் எங்குமே சொல்லி இருக்க மாட்டார். இதுவே வெண்முரசில்  கிருஷ்ணர் கதாபாதிரத்தின் தனி சிறப்பு.

கிருஷ்ணர் – ஒரு குழந்தை:

நிர்வாக துறையில் “Negotiation” பற்றி சொல்லும் பொழுது “Childrens are the best negotiator’s” என்று சொல்லுவார்கள். வேண்டியவற்றை வாங்கும் திறன் ஒரு குழந்தைக்கு தான் முழுவதுமாக தெரியும். கிருஷ்ணர் குந்தியின் கால்களில் நன்றாகச் சேர்ந்து அமர்ந்து அவள் ஆடை நுனியைப்பற்றி கைகளால் சுழற்றியபடி சிறுவனைப்போலவே பேசிக்கொண்டிருந்தான் என ஜெ வர்ணிப்பார். அர்ஜுனன் என்னடா இது ஒரு அறியா சிறுவன் போலே பேசி கொண்டு இருக்கிறானே ,இவனக்கு ஒன்றுமே தெரியாதா என நினைக்கும் பொழுது, நினைவுக்கு வந்தவற்றின் ஒழுங்கில் என சொல்லப்பட்ட அச்சொலோட்டம் முடிந்ததும் அது மிகச்சரியான இடத்துக்கு வந்திருப்பதை திகைப்புடன் அவன் உணர்கிறான். இவன் சாதாரணமானவன் கிடையாது, என்று அர்ஜுணனை திகைக்க வைக்கும் ஒரு காட்சி. இவனை போல் ஒருவன் தான் தன் அத்யந்த நண்பனாக இருக்க முடியும் என நினைக்க தொடங்குகிறான்.  உதாரணமாக கிருஷ்ணர் விதுரரை மிரட்டும் இடம்... மிக சரியாக எங்கே அடித்தால் எங்கே விழுவார் என  அவருக்கு தெரிந்து இருக்கிறது இது இன்று இருக்கும் “Modern PRO” வரை நாம்  பொருத்தி பார்க்கலாம் . இதே போல் பீஷ்மரடிம் பேசி அவரை அஸ்தினாபுரதிற்கு அனுப்புவது.

கிருஷ்ணர் – பிரம்மத்தின் இறை வடிவம்

ஜெ, சில இடங்களில் ஒரு  பிரம்ம வடிவம் ஆகவும் கிருஷ்ணரை வர்ணித்து இருப்பார்.
அணங்கு கொண்ட கௌரவ இளவரசியுடன்  கிருஷ்ணன் ஏதோ பேசி கொண்டே இருப்பதை சாத்யாகி பார்க்கிறான். அப்பிடி என்ன தான் அவன் பேசி இருப்பான் என்று யோசித்து கொண்டு இருக்கிறான். பீஷ்மரை பார்த்து பேசிய பிறகு கிருஷ்ணன்  பாறை மேல் உட்கார்ந்து கொண்டு நதியை  நோக்கி கொண்டு இருக்கிறான். சிறது நேரத்தில் செய்தி வருகிறது அந்த கௌரவ இளவரசி இறந்து விட்டாள் என்று. அவன் முகத்தில் ஒரு சலனமும் இல்லை. அப்பிடி என்றாள் அவன் பாறை மீது உட்கார்ந்து கொண்டு அந்த இளவரசியுடனா பேசி கொண்டு இருந்தான்? அந்த இடத்தில்  ஏதோ கிருஷ்ணன்  மனிதன் என்ற நிலையில் இருந்து ஒரு படி மேலே நிற்பது போல இருந்தது.

அதே போல் புரிசவரசு கிருஷ்ணர் குழல் ஊதுவதை பார்ப்பது. அவன் சலிக்காமல் ஒரே மாதரியாக வாசிக்கிறான். முதலில் சலிப்பு ஏற்பட்டாலும் அதையே உன்னிப்பாக கவனிக்கிறான். அவனை அறியாமலே அவனின் அனைத்து உணர்வுகளும் அதில் லயித்து போகிறது. இதை ஒரு பிரபஞ்ச இயக்கதினுடன் ஒப்பிடலாம். ஒருபார்வையிலே எல்லாம் ஒன்றே போல தோன்றுகின்றன. திரும்ப திரும்ப ஒன்றே  தான் ஆனால் வேறுபாட்டைக் கவனித்தால் அந்த வேறுபாடே பிரம்மாண்டமாக ஆகிறது.திரும்ப ஒன்று நடக்கவே நடக்காமல் முடிவில்லாமல் போவது பயங்கரமாக இருக்கிறது
சகுனியுடன் பகடை விளயாடும் இடமும் இதே போல தான். அவன் ஒரே மாதிரி விளையாடி கொண்டு இருக்கிறான் என தோன்றும். சகுனி அப்பொழுது கிருஷ்ணனிடம் பார்ததும் ஒரு பிரபஞ்ச ஆட்டம் தான்.

கிருஷ்ணர் – நண்பனாக வலம் வந்த தெய்வம்

நமது மரபு “கிருஷ்ணரை” நண்பனாக வலம் வரும் தெய்வமாக தான் பார்க்கிறது. வெண்முரசிலும் கிருஷ்ணர் ஒரு நல்ல நண்பராகவே தான் வடிவமைக்க பட்டு இருக்கிறார். கர்ணன் துரியோதனன் நட்புதான் மிக அதிகமாக பேசபடுகிறது, ஆனால் அர்ஜுனன் கிருஷ்ணர் நட்பை யாரும் பெரியதாக பேச வில்லை. கிருஷ்ணர் உடைய பக்தி வீச்சு அதிகமாக அதிகமாக அர்ஜுனன் சிஷ்யன் என ஆக்க படுகின்றான்  கிருஷ்ணரை தெய்வமாக வழிபடும் கூட்டம் ஆக இருந்தாலும், அனைவரும் உரிமையாக அவனிடத்தில் பேசுகின்றனர். உணவு பரிமாறுபவன் ஒழுங்காக சாப்பிட மாட்டாயா இல்லை தட்டை எடுத்து தலையில் கொட்டி விடுவேன் என உரிமையாக மிரட்டுகிறான். குதிரைக்காரன்  “பேசாதே, இதுதான் இப்போது சிறந்த குதிரை… இதன் கோணல் பாலைவனத்துக்கு ஒரு பொருட்டல்ல… மெல்லிய திசைமாற்றத்தால் ஒன்றும் ஆகிவிடாது. ஆனால் ஓடவேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. இதை நீ எடுத்துக்கொண்டால் போதும்” என அவனை அதட்டுகிறான்.
யாரோ எழுதிய ஒரு புது கவிதை ஞாபகம் வருகிறது, (முழுவதுமாக ஞாபகம் இல்லை)

“மகாபாரதம் காவியம் ஆக்க பட்டது,
கிருஷ்ணன் தெய்வம் ஆக்க பட்டான்,
ஆனால் போரில் செத்து மடிந்த வீரர்கள் என்ன ஆனார்கள்?”

சாமானிய மக்கள் என்றுமே காவியங்களில் முழுவதுமாக பதிய படுவதில்லை. ஆனால் இதில் கிருஷ்ணர்  ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது அங்குள்ள கவனிக்க படாத சாதாரணமான மனிதர்களை பற்றி நிறைய தெரிந்து வைத்து கொள்கிறான். சாரதியாகவும், பணி பெண்ணாகவும், மற்ற சாதாரணமான வேலை செய்யும் ஆட்கள்,  பாரதவர்ஷத்தின் புகழ் பெற்ற மன்னன், தங்களை பற்றியும், தங்கள் குடும்பத்தை பற்றியும் பேசுவதை கண்டு பரவசம் அடைகிறார்கள். அவனை அவனில் ஒருவனாகவே எண்ணி கொள்கிறார்கள்.

கிருஷ்ணர் – பெண்களின் அககாதலன்

 கிருஷ்ணரை வெறும் மன்மதன் என்று சிறியதாக குறுக்க முடியாது. அவன்,அவனை பார்க்கும் அனைத்து பெண்களக்கும் அககாதலானகவே இருக்கிறான். எப்பிடி அத்தனை பெண்களும் இவன் மீது இப்பிடி பித்து கொள்கிறார்கள். ஜெ சில இடங்களில் இதை பற்றி தொட்டு செல்கிறார். ஒரு பெண் யார் முன்னால் முற்றிலும் விடுதலை அடைந்தவளாக, தன்னையே முழுவதும் ஆக உணர்கிறாளோ, அவன் மீது அவள் ஒரு பித்தாக மாறி விடுகிறாள் என்று கூறுகிறார். அதே போல், குழந்தையாகவே இருக்கும் ஆண் மீது ஒரு பெண்ணுக்கு தீரா காதல் பொங்கும். குந்தியும் ஆடை நுனியை பற்றி கொண்டு ஒரு குழந்தை போல் பேசுவதை கண்டு அர்ஜுனன், “அவன் குழந்தையாக நடிக்க வில்லை என்றும் அன்னையர் முன் ஒரு குழந்தையாகவே மாறி விடுகிறான் என்றும் நினைக்கிறான். அதே போல் காந்தாரி முன்பும் அவன் குழந்தை போல மாறி விடுகின்றான்.  அவன் கண்களில் எப்பொழுதும் மிளிரும் குறும்பு புன்னகை, அவனது நானமில்லா செய்கைகள், இது எல்லாம் பெண்கள் மனதில் அவனை ஒரு அணுக்கமானவனாக இருக்க வைத்து விடுகிறது

கிருஷ்ணர் – ஒரு இரக்கம் இல்லா கொலைக்காரர்

கம்ஸனை அழித்து மதுராவை கைபற்றும் பொழுதும், ஏகலைவனின் மகத படைகளிடம் இருந்து மறுபடியும் மதுராவை கைபற்றும் பொழுதும், கிருஷ்ணர் அது வரை அன்று கேட்டிராத இரக்கம் இல்லா பல கொலைகளை செய்கிறார்.  அப்பொழுது“கருணை உள்ள அறம் என்று ஒன்று கிடையாது” என ஒரு வரி வரும். “ஏசு ஒளிமிக்க வாள் கொண்டு நீதி படைக்க போகிறார்” என்பது போன்ற  போன்ற ஒரு அழகான சொல்லாடல்.

கிருஷ்ணர் – ஒரு படிம பார்வை


“ .....சங்கு சக்ர கதாபானே
  துவாரகா நிலையாச்சுத...”

சிறு வயதிலே பூணூல் போட்டால், “சந்தி” தினசரி செய்வேன் என்று என் தந்தை நினைத்து  இருந்தார். முதலில் நானும் தினசரி மூன்று வேளை அதை செய்ய பழக்க பட்டு இருந்தேன். பின்னர் அது தினமும் ஒன்று, வாரம் ஒன்று, மாதம் ஒன்று என்று மாறி கொண்டே இருந்தது.   இப்பொழுது எல்லாம் அவர் “ஆவணி அவிட்டதிற்கு” இரண்டு நாள் முன்னர் போன் செய்து, அன்றைக்காவது நான் சந்தி செய்ய மன்றாடுகிறார். மரபு தன்னுடன் அறு பட்டு போகும் கவலை என் தந்தைக்கு எப்பொழுதும் உண்டு
சென்ற முறை ஆவணி மாதத்தில், நான் “ஷாங்காய்” நகரில் இருக்க வேண்டி இருந்தது. அதிகாலை நான்கு மணிக்கே எனக்கு தந்தையிடம்  “Reminder” வந்து விட்டது. பூணூல் மந்திரமமும் (யக்ஜோவித மந்திரம்) பூணூலையும் என் தந்தை எற்கெனவே என் பையில் வைத்து இருந்தார். கூடவே மறக்காமல் “சந்தி” செய்யும்படியும் சொல்லி இருந்தார். மனம் லயித்து செய்ய முடியாத அனைத்தும் எனக்கு வெறும் சடங்காவே தெரிந்தது.  ஐந்து பத்து நிமிடங்களில் அவசரமாக செய்து அதை வெற்று கடமையாகவே பலர் ஆக்கி விட்டிருக்கிறார் கள் .

ஹோட்டலின் டம்ப்ளெரை பஞ்சாத்ரம் ஆகவும் ஸ்பூணைய் உத்ரனியாகவும் கொண்டு  சந்தி செய்ய உட்கார்ந்து விட்டேன். வீட்டில் இருக்கும் பொழுது புத்தகத்தை பார்த்து சொல்லி விடலாம். இப்பொழுது நினைவில்  மந்த்ரத்தை மீட்டி சொல்ல வேண்டி இருந்தது. அதிசயமாக  எங்கேயெல்லாம் கிருஷ்ணன்/நாராயணன் பெயர் வருகிறதோ அது எல்லாம் சரியாக ஞாபகம் வந்தது. குறிப்பாக கடைசியாக “நமஸ்சவித்ரே...” என்று தொடங்கும் மந்த்ரம் அக்ஷ்ரம் பிழகாமல் ஞாபகம் வந்தது.  அதில் ஒரு வரிதான் மேலே குறிபட பட்டு  இருக்கிறது.

அந்த வரியை சிறிய வயதில் படிக்கும் பொழுது எழுந்த கிளர்ச்சி அப்பொழுது நினைவில் மீட்டி எடுக்கும் பொழுதும் இருந்தது. “சக்ரம்” என்ற பொழுது தீபாவளி பட்டாசு ஞாபகம் வந்தது. கிருஷ்ணர் இது மாதிரி  ஒன்றை தான் கையில் வைத்து இருப்பார் என்று நினைத்து இருந்தேன். பிறகு வளர்ந்தவுடன் அது ஒரு மாதிரி “பூமராங்” ( Boomerang) போல பழங்குடிகள் உபயோகிக்கும் ஆயுதம் என்று முடிவு செய்தேன். ஒரு விசையில் செழுத்த பட்டால் அது வெகு தூரம் சென்று பிறகு நம் கைகளுக்கே வரும் என்று தெரிந்து இருந்தது. Youtube யில் பல முறை அதை பார்க்கும் பொழுது கிருஷ்ணன் இந்த மாதிரிதான் அதை உபயோக படுத்தி இருப்பார் என்று எண்ணி கொள்வேன். வெண்முரசில் “பிரயாகை” படிக்கும் பொழுது, கிருஷ்ணன் சக்ரத்தை உபயோகிக்கும் பொழுது, அதை அர்ஜுனன் அதிசயமாக பார்க்கும் பொழுது .அதே கிளர்ச்சி எனக்கு ஏற்பட்டது.  ஏழு சக்கரங்களாக மாறி அது மின்னல்கள்போல சுழன்று பறந்து தலைகளை சீவிச்சீவித் தள்ளியதைக் ஜெ மிக அழகாக வர்ணிப்பார் அது உடம்பின் எழு சக்ரங்களை குறிக்கிறது என்பதும் நினைவுக்கு வந்தது.

 “வெண்முகில் நகரத்தில்” துவாரகை நகர் வருணனை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “துவாரகை” என்ற ஒற்றை சொல்லில் உள்ள ஆச்சரியத்தை  கொஞ்சம் கொஞ்சமாக விளக்க முடிந்தது. சங்கு சக்ரம் என்றால் இரு மலைகளின் பெயர் என்றும், துவாரகை என்ற நகரம் அது மீதுதான் அமைந்து இருந்தது  என்பதும்  எனக்கு ஒரு புது தகவல் ஆகவே இருந்தது. பாரதத்தின்   கடைசியில் அந்த மாபெரும் நகரம் அழிய போகிறதே என்ற வருத்தமமும் கூடவே தோன்றியது. சாத்யாகியுடன்  என் மனதும் கூடவே பயணம் செய்தது.

படித்து  கொண்டு இருக்கும் பொழுது எனக்கு நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு அய்யங்கார் நண்பனிடம் செய்த உரையாடல் ஞாபகம் வந்தது. அவன் ஒரு கமல் ரசிகன். வெறியன் என்றே கூறலாம். அவனை உசுப்பி விட வேண்டும் என்றே சொன்னேன் , “ஆமா, இவ்வளவு பேசிறியே, கமல் ஒரு நாத்திகர் என்று தெரியுமா?”


அவன் முதலில் மறுத்து பிறகு ஓத்து கொண்டான். ஆனால் அவன் கூறினான், “இப்போ நாத்திகரா இருக்கலாம்,  ஆனால் அவர் “சமஷ்ரயணம் ” செய்து விட்டார் “ அதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். அவன் சொன்னது ஒன்றுமே புரிய வில்லை. ஆனால் அது ஒரு சடங்கு என்பதும் , சங்கையும் சக்ரத்தையும் உடலில் வரைவது என்றும் புரிந்தது. அதை செய்து விட்டால் பிறகு அவன் காலம் எல்லாம் பெருமாளுக்கு அடிமை என்றும்  சொன்னான். அப்பொழுது அதை ஒரு உளறல் என்றே நினைத்தேன். இப்பொழுது வெண்முரசு படிக்கும் பொழுது  சட்டென்று   அந்த உரையாடல் ஞாபகம் வந்தது. சாத்யாகியுடன்  பயனபட்டு அவன் விழிகளில் கிருஷ்ணனை பார்க்கும் பொழுது அதே பரவசம் எனக்கும் வருகிறது.  இதை “தாசா பாவம்” என்றும் சொல்லலாம். இதை  உபன்யாசகர்கள் விரிவாக்கி “சரணாகதி” தத்துவமாக ஆக்கி விட்டார்கள் தற்பொழுது எம்‌ஜி‌ஆர்க்கு இருப்பதும் ஒரு மாதிரியான தாசா பாவம் தான் என தோன்றுகிறது.


“ரக்ஷாமாம் சரனாகதம்.. ” என்று முடிவடையும் அந்த மந்த்ரத்தின்  முடிவில் நம் மனமும், சாத்யாகி போல் கிருஷ்ணன்யிடம் சரண் அடைவதை மட்டும் என்னால் தடுக்க் முடிவதில்லை.


கிருஷ்ணர் – போர் வீரன்


மதுராவை கிருஷ்ணர் கைபற்றும் போர் தந்திரம் மிக அழகாக விவரிக்க பட்டு இருக்கும். அதில் போர்கள் படைகலங்களால் செய்ய படுவது இல்லை எனவும் அது சொற்கலால் செய்ய படுகிறது என கிருஷ்ணர் கூறுவார். உலகின் அத்துணை பெரிய போர்களும் அப்பிடித்தான் செய்யபட்டு இருக்கின்றன. முகமது நபி ஒரு சிறிய படை கொண்டு தான் போரில் ஜெயித்தார். பாபர் லோடியுடன் சண்டையிடும் பொழுது மிக குறைவான ஆட்களைதான் வைத்து இருந்தான். இன்றைய Chruchil வரை இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

கிருஷ்ணர் – ஒரு  புரட்சியாளன்


மக்களை பற்றி கிருஷ்ணன் மிக அருமையாக புரிந்து வைத்து இருக்கிறார். பழங்குடிகள் திரண்டு அரசுகளை அமைப்பதிலுள்ள பெரும் இடர் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அரசர்கள் என்று எண்ணி கொள்வதே என்றும், அதனால்தான் அவர்கள் ஓயாமல் தங்களுக்குள் குல சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். ஜெ யின் வட கிழக்கு பயண குறிப்பிலே இன்னமும் அந்த மக்கள் தங்களுக்குள் எப்பிடி சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறார்.


சிதறுண்டு கிடக்கும் யாதவ குலங்களை ஒன்று திரட்டுகிறார். துவாரகை எனும் பெரிய நகரின் உருவாக்கமே  அனைத்து யாதவ குலங்களை ஒன்று சேர்க்கிறது. காடுகளில் வெறும் மாடு மேய்க்கும் கும்பல் என கருதப்படும் குலத்தின் அடையாளத்தை மெல்ல மெல்ல மாற்றுகிறார். பொருள் சேர சேர, அதிகாரம் சேர சேர, யாதவ குலத்தின் மதிப்பு உயர்வது வெண்முரசில் நன்றாக தெரிகிறது.
இன்று இருக்கும் தலித் இயக்கங்களுக்கு கிருஷ்ணர் ஒரு மாபெரும் முன்னோடி. சே குவாராவை விட, ஸ்டாலினை விட கிருஷ்ணர் கண்டிப்பாக ஒரு நல்ல முன்னோடியாக தான் தெரிகிறார். அவர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று தன்னிரக்க வழி, காலம் காலமாக தங்களை சுரண்டியதை நினைத்து தன்னிரக்கம் கொள்வது, அதன் மூலம் வெறுப்பை வளர்த்து கொள்வது. அல்லது நாராயண குரு, அய்யன் காளி ஆகியோர் முயன்ற வழி. அனைத்து நிலைகளிலும் தம்மை உயர்த்தி கொள்வது,. மெதுவாக அதிகாரம் சேர சேர, நிலை மாற மாற ஒரு பெரும் மாற்றம் நிகழும். கிருஷ்ணர் செய்தது சரியாக இதை தான்.


கிருஷ்ணர் – ஒரு  ராஜதந்திரி

கிருஷ்ணர் நினைத்து இருந்தால் தன் படைகள் மூலமாகவே மகதத்தை வென்று இருக்க முடியும். ஆனால் அவர் விருப்பமோ ஒரு பெரிய நகரத்தை உருவாக்க வேண்டும் என்பது, பொருள் ஈட்ட வேண்டும் என்பது. அதற்காக சாமர்தியமாக அஸ்தினாபுரியை உள்ளே கொண்டு வருகிறார். அஸ்தினாபுரம் உள்ளே வந்தவுடன் மகதம் மதுராவை தாக்க பயப்பிடகிறது.ஒரு நாற்பது வருடங்களக்கு முன்னால் உலகின் அனைத்து நாடுகளும் அமெரிக்கவிடமும் ருசியாவிடமும் அணிவகுத்து நின்றது சரியாக இதற்காகதான். பிறகு அஸ்வமேதம் யாகம் செய்ய வைத்து, சாமர்தியமாக பீமன் மூலம் தன் நீண்ட நாள் எதிரியான ஜராசந்தனை கொல்ல வைத்தது கிருஷ்ணரின் ராஜதந்திரத்தின் பெரும் வெற்றி.

அதே போல் ஒரு தேர்ந்த பொருளாதார நிபுனரை போல் நதி வணிகத்தை விட கடல் வணிகத்தில்  தான் அதிக வருமானம் கூடும் என்பதை துல்லியமாக கணக்கு இடுகிறார். சரியான நபர்களை தன்னுடன் வைத்து கொள்வதில் அவர் தீவரமாக இருந்தார். அதனால் தான் மிக எளிதாக, ஒரு இரவில்  கடைக்கு முன்னாள் தூவ பட்டு இருந்த உப்பை பார்த்து, அவரால் அந்த உப்பு வியாபாரியின் திறமையை கண்டு கொள்ள முடிந்தது.

காந்தியும் கிருஷ்ணரும்:

காந்தி பல கோடி இந்திய மக்களை இணைக்கும் ஒரு படிமமாகத்தான் ராமரை பார்த்தார். காந்தி முன் ராமர், கிருஷ்ணர் என இரு படிமங்கள் இருந்தும் என் ராமரை மட்டும் தேர்ந்து எடுத்தார் என்பது ஒரு சுவாரசியமான கேள்வி. கிருஷ்ணர் கண்டிப்பாக இந்திய நாகரீகத்தின் பன்மை தன்மையை ராமரை விட அதிகம் பிரதிபலிப்பவர் ஆகவே இருக்கிறார்.

முதலில் காந்தி ஒரு ஒழுக்கவியல் சிந்தனைவாதி. கிருஷ்ணர் கொண்டாட்டதின் அடையாளம் ஆனால் ராமர் ஒழுக்கத்தின் அடையாளம்.அதனால் அவர் ராமரையே தேர்ந்து எடுக்கிறார். அதோடு மட்டும் அல்லாமல், ஜெ சொல்லுவதை போல், காந்தியில் பல மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கம் இருக்கிறது. அவரது ஒழுக்க கொள்கை விக்டோரியா ஒழுக்கவியல் சார்ந்து இருக்கிறது, கொஞ்சம் சமனத்தின் தாக்கமும் இருக்கிறது. (சிறிஸ்துவமும் சமனமும் பல இடங்களில் ஒன்றாக தான் இருக்கிறது!!!).
இன்னும் கிருஷ்ணரை  பற்றி கூறி கொண்டே போகலாம், ஆனால் எவ்வளவு கூறினாலும் நினைத்ததை  சொல்ல முடியவில்லயே என்ற குற்ற உணர்ச்சி தான் அதிகம் ஆகிறது. சௌரவ் கங்குலி இடது கை பந்து வீச்சாளர்கள் பந்து வீச வந்தால் இறங்கி அடிப்பது போல்,  பாரதி முதல் ஜெ வரையில் ஆன உணர்வு சார்ந்த எழுத்தாளர்கள், கிருஷ்ணர் என்று வந்தால் இறங்கி ஆடுகிறார்கள். அவர்கள் எழுத்துக்கே ஒரு பெரிய உற்சாகம் வந்து விடுகிறது. அவர்களே வித்தியாசமாக தெரிய படுகிறார்கள்.
வெண்முரசின் கிருஷ்ணன் அனைத்து வகையினரையும் ஈர்க்கிறான். ஒரு பக்திமானோ, வேதாந்தியோ, நாத்திகனோ,பகுத்தறிவாலனோ, கம்யூனிஸ்ட் சித்தாந்ததில் நம்பிக்கை கொண்டவனோ, யாராக இருந்த்தாலும் அவனக்கு  ஏற்ற கிருஷ்ணனை வெண்முரசில் எடுத்து கொள்ளலாம்”

மரபு, “கிருஷ்ணன்” என்ற மாபெரும் பிம்பத்தின் மீது பூச பட்ட அணைத்து வண்ணங்களையும் குழைத்து ஜெ நம் கற்பனை வானில் ஒரு பெரும் வானவில்லை வரைந்து செல்கிறார். நீங்கள் எப்பிடி பார்தாலும் அவன் உங்கள் பார்வைக்கு ஏற்ற மாதிரியே தெரிகிறான்.