Tuesday, July 28, 2020

விண்-2



அன்புள்ள எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களுக்கு

         
தங்களின் இடைவிடாத எழுத்து பணிகளிலும் எனக்கு பதில் கடிதம் எழுதியமைக்கு மிக்க நன்றிகள். தாங்கள் கூறியது அத்தனையும் உண்மை - "ஒவ்வொரு மகாபாரதத்திற்கும் அதன் சாராம்சம் சார்ந்த சிறிய மாறுபாடுகள் உள்ளன. வெண்முரசு மகாபாரதத்தில் இருந்து ஒரு வேதாந்த வடிவை உருவாக்குகிறது. அதற்கேற்பவே கதை சொல்லப்பட்டுள்ளது " ஜெ

        உண்மை தான் திரு ஜெயமோகன் அவர்களே ! அதனால் தான் கிருஷ்ணரை ஒரு அவதார புருஷராக நீங்கள் நிறுத்தவில்லை .உதாரணத்திற்கு பன்னிரு படைக்களத்தில்  சேலையை உருவி மானபங்கப்படுத்த துச்சாதனன் முயன்ற போது,  கண்ணனின் அருளால்  திரௌபதி சேலை வளர்ந்ததாக நீங்கள் சொல்லவில்லை .அங்கு பாஞ்சாலி வஞ்சம் உரைத்ததாகவும் சொல்லவில்லை .அவள் சார்பாக  அவளின் அணுக்க சேடிமாயை தான் வஞ்சம் உரைத்ததாக நீங்கள் எழுதியிருந்தீர்கள் .மேலும் சொல்வளர் காட்டில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்கள் சூதாட்டத்தில் கலந்துகொண்ட போது ,அவர் துவாரகையில் குடிப்பூசல் தீர்க்கும் நிகழ்வில் இருந்ததால் தான் வர இயலாததை தருமரிடம் கூறுவதாக நீங்கள் எழுதியிருந்தீர்கள் .

     தாங்கள் உருவாக்கிய வேதாந்த வடிவை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அதற்ககாவது பாண்டவர்களின் விண்ணுலக நிகழ்வை தனி நாவலாக எழுதவேண்டும்.இது தான் என் விண்ணப்பம் .
தாங்கள் எனக்கு பதில் அனுப்பியதற்கு மிக்க நன்றிகள்
இப்படிக்கு
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்