Wednesday, July 29, 2020

வெண்முரசு அளிப்பது



அன்புள்ள ஜெ

வெண்முரசு நிறைவுற்றபின் இப்போதுதான் நான் வந்து சேர்ந்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக வெண்முரசு சொல்வதென்ன என்று எனக்கு இப்போது ஒற்றைவரியில் சொல்லத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமகா இதுவரை வாழ்ந்ததில் கண்டடைந்தது என்ன என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? ஒன்றை சொல்லலாம், ஆனால் அது மட்டுமல்ல என்றும் தோன்றும் அல்லவா? எனக்கு வெண்முரசில் தோன்றியது அறம் என்ற ஒன்று வெளியே தேவலோகத்தில் இல்லை. அது தெய்வம் உருவாக்கி அளிக்கவில்லை. அதை மனிதர்கள் இங்கே கண்டடைகிறார்கள். இங்கே ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு செயலிலும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த உருவாக்கத்திலுள்ள சிக்கல்களைத்தான் நாம் மகாபாரதத்தில் காண்கிறோம். அது எளிய செயல் அல்ல. நிறைய ரத்தம் நிறைய இழப்பு. ஆனால் ஒட்டுமொத்தமாக மிஞ்சுவது ஒன்று உண்டு. தர்மம் மீதான நம்பிக்கைதான்

 

ஆர்.முருகபாண்டியன்