Sunday, July 12, 2020

வெண்முரசின் நிறைவில்

 

 

 

அன்புள்ள ஜெ, 

வெண்முரசு எழுதிமுடிக்கப்பட்டது என கடந்த வாரம் கேள்விப்பட்டபோதே மகிழ்ச்சி நிறைவு எல்லாம் தாண்டி ஏதோ ஒரு ஏக்கம் வந்துமனதை கவ்வியதுஇத்தனைக்கும் நான் முழுவதும் வாசித்து முடித்தவன் அல்ல 

எவ்வளவு மகத்தான கனவு. கண்முன்னே நிறைவேறி முடிந்துள்ளது

 2013ல் நாம் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விருது அளித்து முடித்து அறைக்கு வந்து நண்பர்கள் குலாம் கூடி பேசி மகிழ்ந்து, அப்போது உங்கள் மேல் இருந்த சர்ச்சை ஒன்றை ஒட்டி விவாதித்துக் கொண்டிருந்த போது, மணிரத்னம் அவர்கள் தனாவிடம் 'ஏன் உங்கள் ஆசான் தனது கிரியேட்டிவ் எனர்ஜியை தேவையின்றி ஊர் வம்புகளில் செலவிடுகிறார் என கேட்டதாக குறிப்பிட்டேன். சட்டென சீரியஸான நீங்கள் அதன்பின் இயல்பாகி மீண்டீர்கள்ஊர் திரும்பி மறுநாள் காலை வியாசனின் பாதங்களில் என்ற கட்டுரையில் வெண்முரசை அறிவித்திருந்தீர்கள். அதை வாசிக்கும் போதே கண்கள் நனைந்தது.  

 அதன்பின் கடந்த ஏழு வருடங்களில் எனக்கு எத்தனையோ இடமாற்றங்கள், பணிமாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெண்முரசு நாவல்களை வாசித்துள்ளேன். இந்தியாவிலும், கொரியாவிலும், ஜெர்மனியிலும்கர்ணணுக்கு துரியன் மணிசூட்டும் பகுதியை கொரியாவில் ஒரு நீண்ட ரயில் பயணத்தில் வாசித்து  விம்மி கண்ணீர் கொட்டியதை கண்டு எதிரில் இருப்பவர் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் வருகிறது 

உங்களை வாசிக்கத் தொடங்கிய கடந்த பத்துவருடங்களில் உங்களால் அடைந்த விசங்கள் பல. இலக்கிய பரிட்சயம், காந்தி, இந்திய ஞானம் அறிமுகம், மறக்கவே முடியாத வாழ்நாள் பூடான் மற்றும் அருகர்களின் பாதை பயணங்கள்நம் நட்பு வட்டம். பெற்றோரிடமும் கிடைக்கப்பெறாத பல வாழ்க்கைக் கல்வி, வழிகாட்டுதல்கள்.. 

ஆனால் மற்ற எல்லாவற்றையும் விட இன்று முதன்மையாக எனக்குத் தோன்றுவது,  " மிகப்பெரிய காரியங்களை எடுத்து தனக்குத்தானே கமிட்மெண்ட்களை விதித்து அதை வேள்வி போல் நிறைவேற்றிக் காட்டும் ஒரு ஆளுமையை வாழ்நாளில் அருகேயிருந்து பார்க்க கிடைத்த பாக்யமே" என எண்ணுகிறேன். 

வெண்முரசுநாள் அன்று உங்களை பார்க்கும் வாய்ப்பை தவறவிட்டுக் கூடாதே என்றுதான் மீட்டிங்கில் இணைந்தேன்பி.எச்.டியை முடித்த கையுடன் கண்டிப்பாக மொத்த நாவல்களையும் வாசித்து முடிப்பேன் என்ற உறுதியை எனக்கு நானே எடுத்துக் கொண்டேன்.

 

 

வாழ்த்துக்களும் பிரியங்களும்

செந்தில் குமார் தேவன்.