Saturday, May 16, 2015

சுதன் எனும் சூதன்



இனிய ஜெயம்,

வாழ்த்துக்கள். காண்டவம்  சுதனின்  குரல்  வழியே  இனிதே துவக்கப்பட்டு  விட்டது.

பிரபஞ்ச துவக்கம்  குறித்த  மற்றொரு தொல்குடியின் ஆழ்மனப் பதிவிலிருந்துதான்  இந்த நாவலும் துவங்கும் என நான் யூகித்திருன்தது  சரிதான். ஆனால்  அதை  அன்னை சிலந்தி  எனும் உருவகத்தைக் கொண்டு துவங்கியது முற்றிலும் எதிர்பாராதது.

ஒன்பது நாகங்களுக்கான வாழ்த்தில் திருதாவின் பெயர் சூதரால் சொலப்படுகிறது.  அங்கிருத்து  முற்றிலும்  மாறி  சூதனின் பாடல்  அன்னை சிலந்திக்கு மாறுகிறது.

தன் நஞ்சை தானுண்டு நிறைந்து அழிவின்மையை அடைந்தது  அந்த அன்னை சிலந்தி.  கால  அகால  வெறுமை  நிறைந்து அழுந்தி  உருவான பிசினால்  முடிவிலியாக வலை நெய்கிறது அது.

[ஒவ்வொரு ஆத்ம சாதகனும் அந்தப் பிசினின் பிடியில் இருந்து  விடுபட நிகழ்த்தும்  பிரயத்தனமும்,  சராசரிகள் கட்டுண்டு  அன்னைச் சிலந்தியின் வாய்க்குள் செல்லும் கதைகளை சொல்வதே விஷ்ணுபுரம்]

சூதனும் [நெய் இமிழ் முயல் ஊண் உண்டு , நறுங்கள் மாந்தி, கைகளை தந்தியில் வழித்துவிட்டு] யாழ் ஏந்தி சொல்லால் ஒரு வலை நெய்கிறான் . மொழியில் எழுகிறது இணை பிரபஞ்சம். 

சூதன் தானெனும் சுனையில் சுழிக்கிறான். தன்னது என்னும் ஆற்றில் செல்கிறான். தன் இருளில் மறைந்து தன்னிலிருந்து ஒளிர்ந்தெழுகிறான். நெய்து நெய்து இருண்ட பெருவெளியை நிறைத்து மேலும் செல்ல இடமில்லாதாகும்போது எதிரே தன்னைக்கண்டு அதேபோலத் திகைத்து நிற்கும் அன்னைப்பெருஞ்சிலந்தியை காண்கிறான்.
 
 
‘இடம்கொடு… விலகு’ என தன் முன்கால்களால் அதை முட்டிவிலக்கி அவன் முன்செல்கிறான். முதலன்னைப் பெருஞ்சிலந்தி அவனுக்குப்பின்னால் புன்னகையுடன் நின்றிருக்கிறது. தன்னை மறந்து சற்றுநேரம் நின்றிருந்தபின் அது மீளும்போது சூதனின் வலைப்பின்னலில் சிக்கியிருப்பதை உணர்கிறது. குழவிச்சிலந்தியென மாறி சிறுகால்களை உதைத்து கொடுக்குகளை வாயிலிட்டு சுவைத்துக்கொண்டு அந்த வலைத்தொட்டிலில் படுத்து கண்வளர்கிறது. 

இணையற்ற இறுதி .  சுதனின்  வலை. அன்னையை குழவி ஆக்குகிறது.  வலை தொட்டிலாகிறது.  நச்சுக் கொடுக்கு  மதலை  வாயிலிட்டு சப்புகையில்  அமுதம் சுரக்கிறது. 

அந்த யாழில், சூதனின் சொல்லில், வேன்முரசில்  உரையும் அந்த அமுதத்தை  அருந்தக் காத்திருக்கிறேன்.

மீண்டும் வாழ்த்துக்கள்/


கடலூர் சீனு