Tuesday, May 12, 2015

வாசகர்கள்




திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

பிரயாகை செம்பதிப்புக்கு வெறும் முந்நூறு பேர் மட்டும் விண்ணப்பித்திருந்தார்கள் என்பது ரொம்பவும் ஆச்சரியமும் வருத்தமும் அளித்தது. அந்த முன்னூறு பேரில் நானும் ஒருவன்.  என் 80 வயது மாமா ஒருவர் நான் வாங்கும் அனைத்து புத்தகங்களையும் படிப்பவர். அவரால்இணையத்தில் 5 நிமிடங்களுக்கு மேல் இயங்கமுடிவதில்லை .வெண்முரசு  அணைத்து நாவல்களையும் அவர் பேரில் வாங்குகிறேன். அவர் விஷ்ணுபுரத்தை மட்டும் கடந்த நான்கு வருடங்களில் பன்னிரண்டு முறைகள் படித்து ரசித்துள்ளார். விஷ்ணுபுரத்தை பற்றி சிலாகிக்கும் போது அவர் வேறு  உலகிற்கு சென்றுவிடுவார்.  நீங்கள் வாசகனின் அர்பணிப்பை பற்றி எழுதியதை அவர் பல சமயங்களில் நினைவு கூறுவார். 
 
உண்மையில் உங்களுக்கு கருத்துக்களை எழுதுவதில் ஒருவித தயக்கமே உள்ள்ளது. சீரிய வாசகர்கள் பலரின் அவதானிப்புகளை படிக்கும்போது அவை மூலம்  வெண்முரசை பற்றிய புரிதல் வேறு தளத்துக்கு செல்கிறது. இருப்பினும் என்னுடைய புரிதல்கள் மேலோட்டமாகவே இருக்கிறது என்பது ஒரு வித சோர்வையே தருகிறது. என் அளவில் கடந்த ஒரு வருடமாக எனக்கு பெரிய திறப்பாக இருப்பது வெண்முரசில் வரும் பாத்திரங்கள் தங்களின் Personality traits, limitations  மற்றும் ethical conflicts போன்றவற்றை எப்பிடி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான். கிருஷ்ணனின் பாத்திரப்படைப்பை மன நெகிழ்வில்லாமல் கடந்த ஒரு அத்யாயம் கூட இல்லை. அனால் இது போதுமா உங்களுக்கு எழுத ... அது மிகசீரிய வாசகர்களின் தளம். அங்கே நான் சொல்ல ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. என் மாமாவிடம் உங்கள் கருத்துகளை எழுதுங்கள் என்று பல முறை சொன்னேன். அவர் தயக்கத்துடன் "அவருக்கு நான் என்னத்த எழுதுவது" என்றுதவிர்த்துவிடுகிறார் .

பிரயாகை எப்படியும் 2000-2500 ஆர்டர் வந்திருக்கும் என்று நினைத்தேன்.

அன்புடன் 
கோகுல்.
 
 
அன்புள்ள கோகுல்
 
நம் வாசகர்களுக்கு மானசீகமாக நூலுக்கென ஒரு விலை இருக்கிறது. வெண்முரசு அதைவிட அதிகமானது. ஆகவே முந்நூறுக்குமேல் செல்ல வாய்ப்பில்லை. முந்நூறுபேர் நீடித்தாலே பெரிய விஷயம் என்பது என் எண்ணம்.

ஆகவேதான் இணையத்தில் இது முழுமையாக இலவசமாகக் கிடைக்கவேண்டும் என நினைக்கிறேன். எனக்கு இது வாசிக்கப்படுவதே முக்கியம்

ஜெ