Thursday, January 12, 2017

கிராதம் கதை






ஜெ சார்

கிராதம் முடிந்தபின்னர்தான் அதை ஒருவகையாகத் தொகுத்துக்கொண்டேன். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் பூசல் வருகிறது. கிருஷ்ணன் மூதேவியால் பீடிக்கப்பட்டு குரோதகிருஷ்ணனாக இருக்கிறார். காரணம் வரவிருக்கும் பேரழிவு அவருக்கு நன்றாகத்தெரிந்துவிட்டது. அவரால் அதைத்தவிர்க்கமுடியாது என நினைக்கிறார். ஆகவே அர்ஜுனனுடன் பூசலிடுகிறார்.

அந்தப்பூசலில் கிருஷ்ணனிடம் தோற்ர அர்ஜுனன் கிருஷ்ணனுக்குச் சமானமானவனாக ஆகவேண்டும் என நினைக்கிறான். ஏனென்றால் அப்போதுதான் அவனுடைய தோழனாக இருந்து கற்கமுடியும். ஆகவே திசைவெல்ல கிளம்பிச்செல்கிறான். யமனை வென்று தண்டாயுதம் பெறுகிறான்.. குபேரனை வென்று அந்தர்த்தானாயுதம் பெறுகிறான். வருணனை வென்று பாசாயுதம் பெறுகிறான். இந்திரனை வென்று வஜ்ராயுதம் வாங்குகிறான். அவை பயனில்லை என்று கண்டு கடைசியாக பாசுபதத்தை சிவனிடமிருந்து பேறுகிறான். அதுதான் இறுதி அஸ்திரம். ஆனால் அதனால் உலகத்தில் எதையும் வெல்லமுடியாது. அதை ஒரு மெய்ஞானமாகவே அடைந்து திரும்பிவருகிறான். இது ஒருகதை. 

மெய்ஞானமாகிய பாசுபதத்தை அடைந்ததும் அர்ஜுனன் கிருஷ்ணனுக்குச் சமானமாக ஆகிவிட்டான். அவனும் கிருஷ்ணனும் பழையபடி நண்பர்களாக ஆகிவிட்டார்கள். இதுதான் உச்சம்.

வைசம்பாயனன் உரியகுருவுக்காக கிளம்பிச்செல்கிறான். அவன் குரு ஒரு கவிஞன் தான் என்கிறார் வழியில் கண்ட பிச்சாடனர். பைலன், சுமந்து ஜைமினி ஆகியோர் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்களுடன் கடைசியாக சூதக்குழந்தையாகிய உக்ரசிரவஸ் சேர்ந்துகொள்கிறார். அவர்கள் வியாசரை அடையாளம் கண்டு அவரிடம் செல்லமுடிவெடுக்கிறார்கள். இது இன்னொரு கதை.

இரண்டாம் கதைக்குள் முதல்கதை ஊடுருவியிருக்கிறது. இந்தக்கதைக்குள் பல உபகதைகள். அவை ஒட்டுமொத்தமாக இந்த நாவலை பல இடங்களுக்கு பக்கவாட்டிலே திறக்கின்றன. காலபீதியின் கதை அதில் உச்சமானது.

சங்கரநாராயணன்