Monday, July 7, 2014

வெண்முரசு கனவும் படங்களும்

அன்புள்ள எழுத்தாளருக்கு…
வெண்முரசு மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புவது ஒன்றே!
தங்கள் எழுத்துக்கள் எழுப்பும் கனவு மனதின் ஒரு தளத்தில் கற்பனையை நிரப்பி வழிய விடும் பரவசத்தை அளிக்கின்றது என்றால், நிழல் படர்ந்த ஓவியங்கள் மற்றொரு தளத்தில் ஏதோ ஒரு பிறவியில் என்றோ கழிந்த நினைவுகளை மீட்டிச் செல்கின்றது.
நன்றிகள்.
அன்புடன்,
இரா.வசந்த குமார்.
*
ஜெ,
வெண்முரசு அளிக்கும் கனவுலகைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். கனவுகளைப்பற்றி எனன் சொல்ல. கனவு என்றால் மாயை, பொய் என்ற அர்த்தத்திலேயே வழக்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். நம் அன்றாட வாழ்க்கையில் எவையெல்லாம் முக்கியமோ அவற்றால் மட்டுமே உருவான ஓர் உலகம் அல்லவா கனவு? கனவுள் செல்வது ந்ம்மை நாமே பார்த்துக்கொள்வதுதான். இலக்கியம் என்பது மானுடகுலத்துக்கு கனவுகளை அளிப்பதுதான். அது மட்டும்தான். டால்ஸ்டாயோ டாஸ்டாயவ்ஸ்கியோ அளித்தது அதைத்தான். வியாசன் அளித்ததும் அதைத்தான். சிலகனவுகள் இனிமையானவை. சிலகனவுகள் துர்க்கனவுகள். நவீன இலக்கியத்திலே பலர் துர்க்கனவுகளைத்தான் அளித்திருக்கிறார்கள். ஆனாலும் அவையும் கனவே. நனவை எழுதுவதற்கு ஒரு பயனும் இல்லை அதைத்தான் அன்றாடம் நாமே பார்த்துக்கொண்டிருக்கிறோமே
இப்போது செய்திகள் சமூக ஊடகங்கள் என்றெல்லாம் அன்றாட நனவை எழுதுவது ஜாஸ்தியாகிக்கொண்டே போகிறது. எங்கே பார்த்தாலும் ஃப்ளாட் ஆன அன்றாட விஷயங்கள். உருக்கமான சம்பவங்களும் பயங்கரமான சம்பவங்களும் எல்லாம் அப்படியே நாளாந்த விசயங்களாக வந்துவிடுகின்றன. அதனால்தான் உலகம் முழுக்க இலக்கியம் பெரும்பாலும் ஃபேண்டசி நோக்கி போய்விட்டது. பொழுதுபோக்கு எழுத்தும் பெரும்பாலும் ஃபேண்டசிதான் இன்று. வெண்முரசு உருவாக்கக்கூடிய கனவு இன்றைய வெளிறிப்போன வாழ்க்கையை சுவையும் அழகும் உடையதாக ஆக்கிவிடுகிறது
கூடவே சண்முகவேலின் படங்கள். உங்கள்கூடவே வந்து நிற்கிறார் மனுஷன். என் பாராட்டுக்களை தெரிவியுங்கள். அதிலும் வண்ணக்கடல் 21, 24, 30,31,32 ஆகியவை கிளாஸிக்