Monday, July 7, 2014

வண்ணக்கடல்- நிறம்

கன்னங்கரிய காமதேனுவாக மகிஷை தன்னை உருவாக்கிக்கொண்டாள். அவளே எருமை என வடிவெடுத்து மண்ணை நிறைத்தவள். இருண்ட கல்பகமரமாக தாலை தன்னை முளைக்கச்செய்தாள். அவளே பனையெனும் மரமானாள்.

இந்த மண் வெண்ணிறத்தெய்வங்களால் ஆளப்படவில்லை. கரிய தெய்வங்களால் வாழவைக்கப்படுகிறது. ஒவ்வொரு துயருற்ற மனிதனுக்கருகிலும் கன்னங்கரிய தெய்வமொன்று பேரருளுடன் வந்தமர்கிறது.

ஜெயமோகன்,

அப்போ இது எப்படி? யாருடைய கற்பிதம்?

<a href="http://www.jeyamohan.in/wp-content/uploads/2014/07/kamdhenu21.jpg"><img src="http://www.jeyamohan.in/wp-content/uploads/2014/07/kamdhenu21.jpg" alt="kamdhenu21" width="422" height="394" class="aligncenter size-full wp-image-57526" /></a>

இது வரை வந்த சித்தரிப்புகளில் காந்தாரர்களை தவிர பெரும்பாலானவர்களை, கிட்டதட்ட அனைவரையுமே, கரிய நிறத்தவராய் மட்டுமே காட்டியிருக்கிறீர்கள். வரலாற்று உண்மையா, வேறேதும் மேலதிக பொருள் உள்ளதா?

தொடர்புடைய இன்னொரு கேள்வி - கூர் நாசி, பெரிய கண்கள் இன்ன பிற அழகென்று இவ்வளவு அழுத்தமாக மனதில் பதிந்தது எப்படி?

அன்புள்ள
மங்கை



அன்புள்ள மங்கை,

நீங்கள் கேட்டிருப்பவை எல்லாம் ஒரு படைப்பை முன்வைத்து நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய வினாக்கள்.அதற்கான விடைகள் அதற்குள்ளேயே உள்ளன

தகவல்களை மட்டும் சொல்கிறேன்

1. நம் இறைவடிவங்களின் சொற்சித்திரங்களே நமக்கு பழையநூல்களில் இருந்து கிடைப்பவை. விரிவான தோற்ற விவரணைகள் மகாபாரதம் போன்ற நூல்களில் இல்லை. பின்னாட்களைசேர்ந்த, அதாவது கிமு மூன்றாம்நூற்றாண்டுவாக்கைச் சேர்ந்த, சிற்பங்களில் அவ்வுருவங்கள் சிலவற்றின் தோற்றத்தை நாம் காண்கிறோம். ஆனாலும் அவை சிலவே.

கிபி ஐந்தாம்நூற்றாண்டுக்குப்பின்னர்ந்தான் சுவரோவியங்களில் தெய்வங்களைக் காணத் தொடங்குகிறோம். காமதேனு போன்ற சிறிய தேவதை உருவங்கள் ஏழாம் நூற்றாண்டுக்குப்பின்னர் தான் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் உருவம்கொள்ளத் தொடங்கின.

நீங்கள் காட்டும் இவ்வுருவம் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப்பிந்தையது.பதினாறாம் நூற்றாண்டைச்சேர்ந்த சமணச் சுவரோவியங்களில்தான் இதன் முதல் வடிவம் காணக்கிடைக்கிறது என்று ஆய்வாளநண்பர் ஒருவர் சொன்னார்.

நாம் இன்றுகாணும் பெரும்பாலான தெய்வ உருவங்கள் இரு தேவைகளுக்காக வரையப்பட்டவை. ஒன்று நாடகங்களுக்காக. இந்தியா முழுக்க பரவிய பார்ஸி நாடகக்குழுக்கள் படுதாக்களில் பலவகையான தெய்வ உருவங்களை வரைந்து பிரபலப்படுத்தின. அதற்காக ஓவியர்களை அமர்த்தின. அவர்கள் ஆலயங்களின் சுவரோவியங்களின் உருவங்களையும் ஐரோப்பிய ஓவியக்கலையின் காட்சிமுறைகளையும் கலந்து இந்த தெய்வஉருவங்களை அளித்தனர்

அச்சுக்கலை வந்தபின்னர் காலண்டர்களுக்காக தெய்வங்களை வரைவது பிரபலமாகியது. அவர்கள் பெரும்பாலும் பார்சி நாடகத்திரைச்சீலைகளையே முன்னுதாரணமாகக் கொண்டனர். ராஜா ரவிவர்மா அதன் முன்னோடி. தமிழகத்தில் நாம் இன்று வழிபடும் தெய்வ முகங்கள் கொண்டையராஜு போன்ற சிவகாசி காலண்டர் ஓவியர்களால் வரையப்பட்டவை. இந்த ஓவியமும் சிவகாசி உற்பத்தியே

2. மகாபாரதத்தில் கரியநிறம் உடையவர்களே எப்போதும் அழகர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களுக்கே வர்ணனைகள் அளிக்கப்பட்டுள்ளன.கிருஷ்ணன், கர்ணன்,அர்ஜுனன் [அர்ஜுனனுக்கே கிருஷ்ணன் என்ற பெயருண்டு] நகுலன் பாஞ்சாலி என அனைவருமே கருமையானவர்கள். பேரழகன் என்று சொல்லபப்டும் நகுலன் கரியவனே. ஆசாரியர்களில் வியாசனும் துரோணரும் கரியவர்கள். நான் எவருடைய நிறத்தையும் மாற்றவில்லை. மூலத்தில் உள்ள விவரணைகளையே பின்பற்றுகிறேன். ஏனென்றால் அது ஒரு சமூக -அரசியல் தகவல்.

3 மகாபாரதக் காலத்துக்குப்பின்னர்தான் நம் அழகியலில் மாற்றம் வந்திருக்கவேண்டும். பிற்கால நாயகிகள் எவருமே கரியவர்கள் அல்ல. கிருஷ்ணை [கறுப்பி] என அழைக்கபப்ட்ட பாஞ்சாலிதான் கடைசி கரிய அழகி.சங்கப் பாடல்களில் அழகிய பெண்கள் மாநிறம் கொண்டவர்களே. இளம் எருமைபோல கரியவர்களும் உண்டு. ஆனால் கண்ணகியும் மாதவியும் மணிமேகலையும் எல்லாம் செந்நிறம் கொண்டவர்கள். அதன்பின் கரிய அழகிகள் இல்லை


ஜெ