Monday, July 7, 2014

வண்ணக்கடல் ஓவியம்

அன்புள்ள ஜெ,
இன்றைய வெண்முரசு [வண்ணக்கடல்-4] ஓவியம் அற்புதமானது. பலமுறை பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்த இடத்தை பலமடங்கு கற்பனையில் விரிவாக்கிக்கொண்டேன். புராணக்கதாபாத்திரங்கள் எல்லாம் நம் கனவிலிருந்து வரக்கூடியவை என்பது என் எண்ணம். கார்க்கோடகன் ஒரு கனவு. ஒரு பெரிய கனவு மனிதன் முன்னால் எப்படி வந்து நிற்கும் என்பதை இதைவிட அற்புதமாக வரைந்துவிடமுடியாது. பயங்கரமான அழகு.
வாழ்த்துக்கள்
சண்முகம்
அன்புள்ள சண்முகம்,
அந்த ஓவியத்தை நானும் பலமுறை அதே மனநிலையில்தான் பார்த்தேன். அந்த கொடுங்கனவுக்குள் வரும் நாகத்திடம் ஆயுதமில்லை. நிதானமான சிரிப்புடன் இருக்கிறது. குந்தி திகைத்துப்போய் நிற்க அவள் கையில் உள்ள அந்த வாள் அபத்தமான சிறிய பொருளாக உள்ளது. எங்கெங்கோ கொண்டுசெல்லும் ஓவியம்.
ஜெ