Monday, December 5, 2016

மகாவீரியம்

மகாவீரியம் மாளிகையும் புற்றுகபுரி மாளிகையும் எங்கோ இருப்பதுபோல் காட்டி நமக்குள் நாம் என வந்து அமர்ந்து அழகு செய்கிறது கிராதம்.

நிலம் நீர் தீ காற்று என்ற நான்கு ஆமைகள் முறையாக தெற்கு மேற்கு வடக்கு கிழக்கு என்று  நான்கு திசைகளிலும் மகாவீரியத்தை தாங்குகின்றன. ஒவ்வொரு ஆமையும் தான்மட்டும்தான் ஒருவனின் மகாவீரியத்திற்கு காரணம் என்று நினைக்கிறது. நினைப்பதோடு இல்லாமல் மற்றொரு திசையில் இன்னொரு ஆமை இல்லை என்றும் நினைத்து கிடக்கிறது. அவைகள் ஒன்றை ஒன்றுப்பார்க்காமல் தங்கள் புலன்களை உள்ளிழுத்துக்கொண்டு இருக்கும்வரைதான் அந்த கோட்டை அசையாமல் இருக்கும், அவைகள் புலன்கள் விழித்தால் அசைந்தால் மகாவீரியம் உடையும். அவற்றின் புலன்களை எழுச்செய்ய ஒரு சிறு மின்னல்புழுபோதும்.  நிலம் நீர் தீ காற்று எத்தனை பெரிய அடித்தலமாக இருந்தாலும் அது சிதைய ஒரு துளி நேரம் போதும் என்னும்போது மானிடன் மகாவீரியம் எத்தனை பெரிய பலகீனமானது.

நிலம் நீர் தீ காற்று என்னும் அடித்தலத்தில் அமைந்த மகாவீரியத்தை மனிதன் கல்லால் சுவர் எழுப்பி இரும்பால் வேல்நட்டு பொன்னால் உயர்த்தி இருக்கிறான். அதாவது இடா பிங்கலா சுழுமுனா நாடியை முறைப்படுத்தி மாவீரியத்தை கட்டி எழுப்புகின்றான், மாவீரியம் கட்டி எழுப்படும்போது தோன்றும் ஆணவத்தால் அது அழிகிறது. மனிதன் கண்ணீரில் விழுகின்றான். மகாவீரியம் கர்மமலத்தை காட்டுகின்றது. கடக்கச்சொல்கிறது. 

அன்னமயகோசம் பிரணமயகோசம் மனோமயகோசம் விஞ்ஞானமயகோசம் ஆனந்தமயகோசம் என்னும் தொன்னூற்று ஆறு தத்துவங்களை உள்ளடக்கிய மனித உடலின் மாயமலத்தை புற்றுகபுரி காட்டுகின்றது. தியானம் மாயையின் கோட்டையை அழிக்கும்போது, கோட்டையின் காவலனாகிய கௌமாரன் என்றும் இளமையுடைய குகன் ஆன்மா சகரஸ்ராரத்தின் வழியாக வெளியேறி இந்திரபுரியை அடைகிறது. கௌமாரன் தன்னை இந்திரனின் தளபதி என்று நினைத்துக்கொள்வதுதான் மாயையின் வல்லமை. விரித்திரனைப்பார்ப்பதுபோல ஆன்மா அனைத்தையும் வேடிக்கைப்பார்க்கிறது. பழம்தின்னும் குருவியும் பழம்தின்னாத குருவியும். புற்றுகபுரி மயக்கத்தால் விழுகிறது. மாயாமலம் மயக்கத்தை கடக்கச்சொல்கிறது. 

மகாவீரியத்தில் இல்லாத படைத்தளபதி புற்றுகபுரியில் இருக்கிறான் என்பதுதான் புற்றுகபுரியின் அழகே. கர்மபுரியில் முகம் காட்டாத ஆன்மா, மாயாபுரியில் முகம் காட்டுகின்றது.
ராமராஜன் மாணிக்கவேல்