Saturday, February 23, 2019

நியாயங்கள்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

செந்நாவேங்கை அத்தியாயம் நாற்பதில் " யுயுத்சு பாண்டவ அணியில் கிருஷ்ணர் இருப்பதினால் தானும் அவருக்காய் அவரின் அணியில் சேர்ந்து கொள்ள போவதாய் துரியோதனனிடம் கூற  துச்சாதனன், சுபாகு எல்லாம்  கடுப்பாகிறார்கள். துரியோதனின் அன்பையும் பெருந்தன்மையையும் மிஸ்யூஸ் பண்ணுவதாக குண்டாசி கூறுகிறான்.  ஆனால் துரியோதனனோ “இளைய யாதவரிடம் என் வணக்கத்தை தெரிவி. எதிர்நிலையில் நிற்பவனைப்போல் அவரை அறிந்தவர் எவரும் என்றுமிருந்ததில்லை என்று சொல்” என்றான் துரியோதனன். “யுதிஷ்டிரனிடமும் தம்பியரிடமும் நானும் என் தம்பியரும் கொண்டிருக்கும் அன்பை சொல். பிறிதொரு பிறவியில் ஷத்ரியர்கள் அல்லாமல் பிறந்து எளிய உள்ளத்துடன் இணைந்து வாழ்வோம் என்று கூறு.” என கூற யுயுத்ஸு தலைவணங்கினான். ஜெயமோகன் சார் இதை மீண்டும் படிக்கும்போது மனது பிசைந்தது. உண்மையிலே ஷாத்ரம் என்றால் என்ன ? என மனம் கிண்ட ...வெண்முரசு  பல இடங்களில் ஷத்ரியர் யார்? என கூறி இருக்கிறது. மண் மீது பெரும் விருப்பு கொண்டவன். எடுத்த முடிவில் உறுதியாய் இருப்பவன். கிண்டலாகவும் பல இடங்களில் கூறி இருக்கிறது. ஆனால்  துரியோதனின் இந்த வார்த்தைதான் ஷாத்ரம் என நினைக்கிறேன் . தன்னையும், தனது இலக்குக்கு அல்லது விருப்புக்கு எதிரி என்று கொண்டவனையும்  உள்ளும் புறமும் அறிவது. ஆனாலும் நடைமுறைகளுக்கு அதை வெளிபடுத்தாமல் அரசியல் செய்வது.  மற்ற எல்லாரும் எளிய பிறவிகள் தான்.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்