Friday, November 7, 2014

வண்ணக்கடல்- கர்ணன் - ராமராஜன் மாணிக்கவேல்



வண்ணக்கடல்-60


சூதனாக இருக்க நினைத்தாலும் இருக்க முடியாததுதான் கர்ணனின் அகம் படுத்தும் பாடு.

 ஷத்ரியனாக இருக்க நினைத்தாலும் இருக்க முடியாததுதான் துரோணரின் அகம் படுத்தும் பாடு.  

கர்ணன் அகம் விரும்புவது ஷத்ரியன் என்பது.அது வெறும் சாதி இல்லை.காப்பாற்றுவது, காப்பாற்றுவதற்காக தனது உயிரையும் தியாகம் செய்வது. 

துரோணர் அகம் விரும்புவது பிரமத்தை அடைவது அது வெறும் பிராமணசாதி இல்லை.பிரமத்தை அடைவது பிரமத்தை அடைய வழிகாட்டுவது.  

மீண்டும் முதலிலே இருந்து தொடங்கினாலும் அந்த முதல் சுட்டுவது அதுதான். வெண்முரசில் கர்ணனும் துரோணனும் அந்த முதலிருந்தே கிளைக்கிறது.அந்த முதலை நீக்கிவிட்டுப்பார்த்தால் கர்ணனும் துரோணனும் அவர்களி்ன் உயரத்தை இழந்துவிடுகின்றார்கள்.  
துரோணர் தனது கையில் வைத்திருக்கும் தர்ப்பையை தாயின் நினைவாக வைத்திருக்கின்றார் என்பது ஒரு எளிய மனத்தின் அடையாளம் அது.அதன் மூலம் அவர் ஒரு மகன் என்பதைக்காட்ட மட்டும்தான் பயன்படுத்துகின்றார் என்று நாம் நினைப்பதால் அதனால் பெரும் பயன் என்ன? 

மண்ணில் நாம் காணும் புல் பிரமத்தின் ஒரு துளி.தாயும் பிரமத்தின் ஒரு துளி.இரண்டும் மண்ணை நிறைக்கின்றது.பிரமத்தை விட்டுவிட முடியவில்லை என்பதுதான் துரோணரின் நிலை.  
அம்மாவை இழந்துவிட்டோம் என்பதாலா துரோணர் பரசுராமரைத்தேடி ஓடினார்?  
ஸ்ரீராகவேந்திரர் தான் கற்ற கல்வியின் மூலம் வேதம் கற்பிக்கும் ஆசிரியராக மட்டும் இருந்திருந்தால்போதும் என்று அன்றைய அவர்பிறந்த சமூகம் நினைத்தது.ஆனால் அவருக்குள் இருந்த அகம் குரு என்பதை கண்டு கொண்டது அதனால்தான் சமூகத்தை தாண்டினார்.  
கர்ணன் துரோணர் இருவரும் சமூகத்தை தாண்டவேண்டிய அகத்தோடு இருக்கிறார்கள்.அதுதான் கர்ணன் கையில் வில்.துரோணர் கையில் தர்ப்பை.  

மீண்டும் முதலிலேயே இருந்தா?என்ற கேள்வி எழுகின்றதா?  
முதலையும் முடிவையும் இணைத்தால் வட்டம்.முதலையும் முடிவையும் இணையவே விடாவிட்டால் கோடு. 

துரோணரும், கர்ணனும் எங்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் முதலேயே வந்து நின்று தங்களை ஒரு வட்டம் என்றே காட்டுகின்றார்கள்.
சூதனாக இருக்க நினைத்தாலும் இருக்க முடியாததுதான் கர்ணனின் அகம் படுத்தும் பாடு.

 ஷத்ரியனாக இருக்க நினைத்தாலும் இருக்க முடியாததுதான் துரோணரின் அகம் படுத்தும் பாடு. 
நன்றி.

வண்ணக்கடல்-61

பிரகலாதன், மகாபலி கதைகள் அடிக்காணமுடியாத ஆழமும் முடிக்காணமுடியாத உச்சமும் கொண்டு தத்துவ விசுவரூபத்தால் வளர்ந்து தழைத்து உள்ளது.

மால் அயன் காண அடி முடி என்பது இதுதானா?
இந்த புடவி என்பது விண்ணில் பறக்கும் ஒரு யானையின் சிறு தசைதுண்டு என்ற படிமத்தில் நெஞ்சம் உறைந்து உறைந்து நெகிழ்ந்து வளர்கின்றது.

விண்ணில் எத்தனை எத்தனை யானை அவைகளின் சிறுசிறு தசைதுண்டுகள் எத்தனை எத்தனை பிரபஞ்சம் விரிந்து விரிந்து வியக்க வைக்கிறது..

பூமி ஒரு காளம்பூத்த மாமிசத்துண்டு உயிர்கள் எல்லாம் புழு. நினைக்க நினைக்க அட மானிடா அற்ப புழுவேஎன்று கத்தவேண்டும்போல் உள்ளது. ஆனால் இந்த புழுப்படுத்தும்பாடுதான் எத்தனை எத்தனைப்பெரிய வரலாறு.
வாழ்க வரலாறு.
நன்றி.