Wednesday, August 5, 2020

வெண்முரசின் சொற்கள்


அன்புள்ள ஜெ

சிலசமயம் வெண்முரசின் சொற்கள் அவை சொல்லப்பட்ட எல்லைகளையும் சந்தர்ப்பங்களையும் கடந்து வேறுவகையில் நினைவில் நின்றிருக்கின்றன. நான் பீமன் சொல்லும் பல வரிகளை அப்படி எடுத்துக்கொண்டிருக்கிறேன். அவையெல்லாமே கசப்பும் நக்கலும் கொண்டவை. அவை ஏன் இப்போது பொருத்தமாக இருக்கின்றன? ஏன் நம் மனம் அவற்றை நினைத்துவைத்திருக்கிறது? ஏனென்றால் இந்தக்காலகட்டம் ஒட்டுமொத்தமாகவே அவநம்பிக்கையும் கசப்பும் கொண்டதாக உள்ளது. இன்று நக்கலும் பகடியும்தான் கூடுதலாக அர்த்தப்படுகின்றன என்று படுகிறது. பீமனின் இந்தவரி

பாரதவர்ஷத்தின் இடரே இதுதான்நாட்டின் நெறிகள் காடுறைவோரால் அமைக்கப்படுகின்றன

வாசிக்கும்போதே எனக்கு புன்னகையை வரவழைத்தது. அதை உங்கள் தளத்தில் தேடி எடுத்து அந்த அத்தியாயத்தை மட்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். இந்த வரி அளிக்கும் அர்த்தங்கள் பல. காந்தியிலிருந்து எவ்வளவோ விஷயங்களை பொருத்திப்பார்க்கமுடிகிறது

ஆனந்த்